இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் விற்கப்படும் பொருட்களின் விலைப்பட்டியல் கட்டாயம் வைக்கப்பட வேண்டும் என அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப ஆணையருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களில் உள்ள பிரசாதக் கடைகளில் தரக்குறைவு மற்றும் அதிக விலை போன்ற புகார்கள் நீண்ட காலமாக எழுந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அமைச்சர் ரமேஷ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இனி கோவில் வளாகத்திற்குள்ளேயே பிரசாதங்கள் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட வேண்டும் என்றும், இந்தத் திட்டம் அடுத்த மூன்று மாதங்களுக்குள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், வடை, முறுக்கு போன்ற பிரசாதங்களின் அளவு, விலைப்பட்டியல், தயாரிப்பு தேதி போன்ற விவரங்களைக் கண்காணிக்க ஒரு தனி குழு அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்று மதுரை கள்ளழகர் கோவிலில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ரமேஷ், அங்கு அதிக விலைக்கு பூஜை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதைக் கண்டு அறிவுரை வழங்கினார்.
அனைத்து கடைகளிலும் அரசின் விலை பட்டியலை காட்சிப்படுத்த வேண்டும் என்றும், இது தொடர்பாக அனைத்து கடைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் ஆணையருக்கு அமைச்சர் ரமேஷ் அறிவுறுத்தியுள்ளார்.