தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அண்ணாமலை, தனது புதிய அரசியல் இயக்கம் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். 'வீ த லீடர்ஸ்' (We The Leaders) இயக்கத்தில் இதுவரை 18 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார். 50 லட்சம் பேர் இணைந்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பேசுவோம் என இலக்கு நிர்ணயித்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் தனது முதல் பாட்காஸ்ட் நிகழ்ச்சி குறித்து அண்ணாமலை அறிவித்திருந்தார். அதன்படி, இன்று காலை 10 மணிக்கு அவரது யூடியூப் சேனலில் இந்த நிகழ்ச்சி வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள், சட்டம் ஒழுங்கு, சமூக மாற்றங்கள் குறித்து அவர் விரிவாகப் பேசியுள்ளார். இனிவரும் வாரங்களிலும் இது போன்ற சுவாரசியமான தலைப்புகளில் பாட்காஸ்ட் தொடர்கள் வெளியாகும் என அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தன் சொந்த கிராமத்துத் தோட்டத்து விவசாய களத்தில் நின்றபடி, தனது சிறு வயது நினைவுகளையும், தன்னை மக்கள் சேவைக்கு திருப்பிய அந்தப் பொறி குறித்தும் உருக்கமாகப் பேசியுள்ளார் அண்ணாமலை. 'வீ த லீடர்ஸ்' இயக்கத்தில் தனிப்பட்ட அழைப்பு ஏதும் விடுக்காமல், மக்களின் பேராதரவோடு 18 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளதை அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். OTP அடிப்படையிலான இணையதள உறுப்பினர் சேர்க்கை முறையை அறிமுகப்படுத்தியதன் மூலம், உறுப்பினர்களின் உண்மையான அரசியல் விருப்பங்களை அறிய முடியும் என அவர் கூறியுள்ளார்.
'50,00,001 பேர் இணைந்த பிறகுதான் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி பேசுவோம், அதுவரை உழைப்போம்' என்று அண்ணாமலை இலக்கு நிர்ணயித்துள்ளார். தனது முந்தைய கட்சியான பாஜகவைச் சேர்ந்தவர்களுக்கோ, நண்பர்களுக்கோ தனிப்பட்ட முறையில் போன் செய்து இயக்கத்தில் இணையுமாறு அழைக்கவில்லை என்பதையும் அவர் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த அமைப்பு விரைவில் முழுமையான அரசியல் கட்சியாக மாறவுள்ளது. வரும் ஜூலை மாதம் முதல் 'வீ த லீடர்ஸ்' இயக்கத்தின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் தீவிரமடையும் என்றும், உள்ளாட்சித் தேர்தலில் இவர்களது கட்சி போட்டியிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தைப் போல, அண்ணாமலையின் இந்த புதிய அரசியல் வரவும் தமிழக அரசியல் சூழலில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.