தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருவதாகவும், இதை தடுக்க தவறிய முதலமைச்சர் விஜய் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'ஜோசப் விஜய் ப்ரோ, உங்களுக்கு காது கேட்கிறதா? எத்தனை நாட்கள் உங்கள் ஆட்சி தாங்கும்? தவெக ஆட்சி ஒரு விஷக்கிருமி. விஜய் முதுகெலும்பு இல்லாத முதல்வர். சட்டத்தை பாதுகாக்க தவறிய முதல்வர் விஜய் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என கடுமையாக சாடினார்.
சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, குற்றங்களுக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்வது பாசிசப் போக்கு என்றும், திமுக ஆட்சிக்கும் தவெக ஆட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 48 மணி நேரத்தில் 20 பாலியல் வன்கொடுமைகள் மற்றும் 15 போக்சோ குற்றங்கள் நடந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
3 வயது குழந்தையின் பெற்றோரை தவெக எம்எல்ஏ மிரட்டுவதாகவும், சிறுமியின் பெற்றோரை அழைத்து தவெக எம்எல்ஏ கைநாட்டு வைக்கிறார் என்றும் குற்றம்சாட்டினார். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை கண்டித்து வரும் 18ஆம் தேதி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், காவல்துறை முற்றிலும் கெட்டுப்போய்விட்டதற்கு முதலமைச்சர் விஜயே காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.