தமிழக முதல்வர் விஜய் டெல்லிக்கு மேற்கொண்ட பயணம் வீண் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார். நீட் தேர்வு ரத்து செய்யப்படாது என தெரிந்தும், அதற்காக மீண்டும் கோரிக்கை வைத்தது நேரத்தை வீணடிப்பதாக அவர் கூறினார்.
முதல்வர் பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக நிதி ஆயோக் கூட்டத்தில் விஜய் கலந்துகொண்டதால் தமிழக மக்களிடம் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அவர் முன்வைத்த திட்டங்கள் ஆழமானதாகவோ, தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகவோ இல்லை என்றும், திமுக, அதிமுக முதல்வர்கள் ஏற்கனவே முன்வைத்த அதே கோரிக்கைகள்தான் என்றும் கிருஷ்ணசாமி குறிப்பிட்டுள்ளார்.
சாலைப் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த 8-12 வழிச்சாலைகள் மற்றும் 6 வழிச்சாலைகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை, சாலைப் போக்குவரத்து குறித்த புரிதல் இல்லாத அதிகாரிகள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் வாசிக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார். மேலும், 100 நாள் வேலைத் திட்டத்தில் மத்திய அரசின் பங்களிப்பு 60% ஆக குறைக்கப்பட்டு, மாநில அரசின் பங்களிப்பு 40% ஆக உயர்த்தப்பட்டதை முதல்வர் கடுமையாக எதிர்த்திருக்க வேண்டும் என்றும், இது மாநிலத்திற்கு கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.
புதிய கல்விக் கொள்கையின் நல்ல அம்சங்களை ஆராயாமல் அதை அமல்படுத்த மாட்டோம் எனக் கூறுவதாகவும், அதே சமயம் அதற்காக ஒதுக்கப்படும் நிதியை கேட்பது பொருத்தமற்றது என்றும் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பினார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து முடிக்க நிதி ஒதுக்க வலியுறுத்தாமல், கோவைக்கு புதிய எய்ம்ஸ் கேட்பதால் என்ன பயன் என்றும் அவர் வினவினார். சமூக வலைதளங்களில் பிம்பத்தை கட்டமைத்து ஓட்டு வாங்குவது வேறு, மக்களின் வாழ்வாதாரத்திற்கான கட்டுமானங்களை கட்டி அமைப்பது வேறு என்றும், முதல்வர் நிஜத்தை நோக்கி பயணிக்க வேண்டிய நேரம் இது என்றும் கிருஷ்ணசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.