தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோயில் பிரசாதக் கடைகளில் நிலவி வந்த தரக்குறைவு மற்றும் விலை உயர்வு புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அமைச்சர் ரமேஷ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இனி, கோயில் வளாகங்களுக்குள்ளேயே பிரசாதங்கள் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அடுத்த மூன்று மாதங்களுக்குள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் கெடு விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், வடை, முறுக்கு போன்ற பிரசாதங்களின் அளவு, விலைப்பட்டியல், தயாரிப்பு தேதி போன்ற விவரங்களை கண்காணிக்க தனி குழு அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கோயில்களில் விற்கப்படும் பொருட்களின் விலைப்பட்டியலை கட்டாயம் வைக்க வேண்டும் என்றும் அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார். தரமான, இறைவனுக்கு சமர்ப்பிக்கத் தகுதியான பொருட்களை மட்டுமே விற்க வேண்டும் என்றும், அரசிடம் அனுமதி பெறாத எந்தப் பொருட்களையும் விற்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக வசூலிக்கக் கூடாது, தரமற்ற அல்லது கெட்டுப்போன பொருட்களை விற்கக் கூடாது, பக்தர்கள் கேட்காத பொருட்களை வற்புறுத்திக் கொடுக்கக் கூடாது போன்ற முக்கிய அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், MRP குறிப்பிடப்பட்ட பொருட்களின் விலையை அதிகமாக விற்கக் கூடாது. பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக மஞ்சள் துணிப்பைகள், மூங்கில் கூடைகள், காகிதப் பைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். கடை அருகே உள்ள பகுதிகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும்.
இந்த விதிமுறைகளை மீறும் விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அதிக விலை வசூலித்தல், தரமற்ற பொருட்கள் விற்பனை செய்தல், விதிமுறைகளை மீறி பக்தர்களுக்கு இடையூறு செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடும் கடைகளின் உரிமம் பரிசீலனை செய்யப்பட்டு ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை அனைத்து மண்டல இணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், சார்நிலை அலுவலர்கள் மற்றும் கோயில் நிர்வாகிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.