உலகளவில் சுமார் 300 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வரும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் மெசஞ்சர் இனி இலவசமாக கிடைக்காது என்ற செய்தி பயனர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெக்ஸ்ட் மெசேஜ், புகைப்படங்கள், வீடியோக்கள், ஆடியோக்கள் மற்றும் அழைப்புகள் என அனைத்திற்கும் பயன்படுத்தப்படும் இந்த செயலி, பல ஆண்டுகளாக இலவசமாக சேவையாற்றி வந்தது.
தற்போது, மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப் பிளஸ் என்ற புதிய சந்தா சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது அனைவருக்கும் கட்டாயமில்லை என்றாலும், கூடுதல் தனிப்பட்ட அம்சங்களை விரும்புபவர்களுக்கான பிரீமியம் சேவையாகும். இது ஆண்ட்ராய்டு மற்றும் iOS இரண்டிலும் கிடைக்கும். அமைப்புகள் (Settings) மெனுவில் நேரடியாக இதைச் செயல்படுத்தலாம்.
வாட்ஸ்அப் பிளஸ் மாதக் கட்டணம் ரூ.79 ஆகும். முதல் முறையாக சந்தா எடுப்பவர்களுக்கு ஒரு மாத இலவச சோதனை வழங்கப்படும். இந்த காலம் முடிந்த பிறகு, சந்தாவை ரத்து செய்யாவிட்டால், ஒவ்வொரு மாதமும் தானாகவே வங்கிக் கணக்கு அல்லது UPI மூலம் பணம் எடுக்கப்படும். இருப்பினும், சந்தாவை எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம் அல்லது மீண்டும் செயல்படுத்தலாம்.
வாட்ஸ்அப் பிளஸ் சந்தாதாரர்களுக்கு செயலியின் கருப்பொருளை (Theme) மாற்றும் வசதி, ஒவ்வொரு உரையாடலுக்கும் தனித்தனி ரிங்டோன் அமைக்கும் வசதி, 20 உரையாடல்கள் வரை பின் செய்யும் வசதி, செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கப்பட்ட ஈமோஜிகள், சிறப்பு ஸ்டிக்கர் பேக்குகள் மற்றும் தனிப்பயன் அரட்டைப் பட்டியல் வடிவமைப்பு போன்ற பல சிறப்பு அம்சங்கள் கிடைக்கும்.