சட்டமன்றத் தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ள நிலையில், அக்கட்சியின் வேட்பாளர் ஒருவர், 'உங்கள் எம்எல்ஏ ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட தயாரா?' என்று கேட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறாவிட்டாலும், காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் விஜய் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். இந்த சூழலில், தவெக சார்பில் தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர்கள் தங்கள் தொகுதிகளுக்குச் சென்று மக்களிடம் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த தவெக வேட்பாளர் ஜே.கே.ஆர். முருகன், அமளிநகர் பகுதிக்குச் சென்று மக்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது, முன்னாள் திமுக அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணனிடம், சமீபத்திய பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர் கருத்துகளைத் தெரிவித்தார்.
'கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் ஆதார் அர்ஜுனாவை, வில்லிவாக்கம் எம்எல்ஏ பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு, திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட திராணி உள்ளதா என்று நீங்கள் (அனிதா ராதாகிருஷ்ணன்) கேட்டீர்கள். நான் இப்போது உங்களைக் கேட்கிறேன். உங்களால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இதே திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட தயாரா?' என்று ஜே.கே.ஆர். முருகன் கேள்வியெழுப்பினார். மேலும், 'நான் தோற்றாலும் திருச்செந்தூர் தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் நான் தான்' என்றும் அவர் கூறினார்.