உங்கள் கைப்பேசி தொலைந்துவிட்டதா அல்லது தவறிவிட்டதா? கவலையை விடுங்கள்! இந்திய தொலைத்தொடர்புத் துறை, காணாமல் போன அல்லது தவறவிட்ட செல்போன்களை மீட்க ஒரு பிரத்யேக இணையதளத்தை உருவாக்கியுள்ளது. CEIR – Central Equipment Identity Register (https://www.ceir.gov.in/) என்ற இந்த இணையதளம் மூலம், பொதுமக்கள் தங்கள் தொலைந்த செல்போன்கள் குறித்த விவரங்களைப் பதிவு செய்து புகார் அளிக்கலாம்.
புகார்தாரர்கள், முதலில் காவல் நிலையத்தில் புகார் அளித்து, அதற்கான மனு ரசீதைப் பெற வேண்டும். பின்னர், அந்த ரசீதைக் கொண்டு CEIR இணையதளத்தில் தங்கள் புகாரைப் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு புகார் அளிக்கப்பட்டவுடன், உங்கள் செல்போன் வேறு யாராலும் பயன்படுத்த முடியாதபடி தடுக்கப்படும் (Block செய்யப்படும்).
மேலும், உங்கள் செல்போனில் புதிய சிம்கார்டு பயன்படுத்தப்பட்டால், அந்த நபரின் விவரங்கள் உடனடியாக உங்களுக்கும், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கும் அறிவிக்கப்படும். இதன் மூலம், தொலைந்து போன உங்கள் செல்போனை விரைவாக மீட்க முடியும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
சைபர் குற்றங்கள் தொடர்பாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டால், உடனடியாக 1930 என்ற இலவச எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மேலும், https://cybercrime.gov.in/ என்ற இணையதளத்திலும் புகார் பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
