இந்தியாவின் எந்த மாநிலத்திலும் புதிய வக்பு சட்டம் அமல்படுத்தப்படவில்லை என்றும், தமிழகத்திலும் வக்பு திருத்தச் சட்டம் இதுவரை அமல்படுத்தப்படவில்லை, இனியும் அமல்படுத்தப்படாது என்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார். இது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
உமித் போர்ட்டலில் வக்பு சொத்துக்களைப் பதிவேற்றம் செய்வதில் உள்ள சவால்கள் குறித்து பேசிய அமைச்சர், அதிகாரிகள் இயன்றவரை பதிவேற்றம் செய்துள்ளதாகவும், விடுபட்டவை பதிவேற்றம் செய்ய உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் தெரிவித்தார். வக்ப் சட்டத்திருத்தத்தில் உள்ள பல்வேறு ஷரத்துகளை எதிர்ப்போம், அதற்கான தீர்மானத்தையும் நிறைவேற்றுவோம் என்றும் அவர் உறுதியளித்தார்.
இஸ்லாமிய சமூகத்தினரின் பயன்பாட்டிற்காக மசூதிகள், தர்காக்கள், மதரஸாக்களின் பெயரால் தானமாக வழங்கப்பட்டவையே வக்பு சொத்துக்கள் ஆகும். இவை அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களாக உள்ளன. இந்தச் சொத்துக்களைக் கண்காணிப்பதற்காகவும், தவறுகள் நிகழாமல் தடுப்பதற்காகவும் இந்திய அரசு 1954 இல் வக்பு சட்டங்களை நாடாளுமன்றத்தில் இயற்றியது. அதன் தொடர்ச்சியாக 1958 இல் அனைத்து மாநிலங்களிலும் வக்பு வாரியங்கள் ஏற்படுத்தப்பட்டன.
இந்தச் சட்டங்கள் பின்னர் 1995 இல் விரிவாக்கம் செய்யப்பட்டு, முழுமைப்படுத்தப்பட்டு, அந்தச் சட்ட விதிகளின் அடிப்படையில் நிர்வகிக்கப்பட்டும், கண்காணிக்கப்பட்டும் வருகின்றன. இந்நிலையில், வக்பு வாரியத்தின் நிர்வாகச் செயல்திறனை மேம்படுத்தவும், வக்பு வாரியம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் வக்பு சட்டத்தில் திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.