தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கடுமையாக விமர்சித்துள்ளார். திண்டிவனம் அருகே சலூன் கடை உரிமையாளர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டது, திருச்சியில் ரவுடி பாதுஷா ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்டது, சிவகங்கை மாவட்டத்தில் தவெக நிர்வாகி நவீன் குமார் மதுபானக் கடையில் கொலை செய்யப்பட்டது போன்ற சம்பவங்கள் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதையே காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நீலகிரி மாவட்டம் உதக மண்டலத்தில் கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் உடல் கண்டெடுக்கப்பட்டது, சிவகங்கை அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 12 மற்றும் 15 வயது சிறார்கள் கைது, சென்னை பெரம்பூரில் மனைவியே கணவனை ஆண் நண்பருடன் சேர்ந்து கொலை செய்தது, திருநெல்வேலி அருகே பொது இடத்தில் மோதலில் 7 பேர் அரிவாளால் வெட்டப்பட்டது போன்ற சம்பவங்களும் தமிழகத்தின் பாதுகாப்பற்ற நிலையை உணர்த்துவதாக வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கம் நகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் போதைப்பொருள் பதுக்கி வைத்திருந்ததாக காங்கிரஸ் நிர்வாகி நடராசன் கைது, ஈரோட்டில் சட்டவிரோதமாக மது, புகையிலை விற்பனை செய்த 5 பேர் கைது, திருச்சி பாலக்கரை பகுதியில் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதில் 9 பேர் கைது, சேலம் மேட்டூர் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை கடத்திய தவெக நிர்வாகி கைது, கிருஷ்ணகிரி அருகே 85 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிய நபர் தேடப்படுவது என தொடர் குற்றச் சம்பவங்கள் மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையை உருவாக்கியுள்ளன.
குற்றவாளிகள் பகலில், பொது இடங்களில் கொலை செய்யும் அளவுக்கு தைரியம் அதிகரித்துள்ளதாகவும், காவல்துறை அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால் குற்றங்களைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் வெற்று அறிவிப்புகள் மட்டுமே வெளியிடப்படுவதாகவும் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார். உடனடியாக முதல்வர் தலைமையில் சட்டம்-ஒழுங்கு குறித்து உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும், குற்றப் பின்னணி உள்ளவர்கள் மீது கண்காணிப்பு, காவல் நிலையங்களில் மக்கள் அச்சமின்றி புகார் அளிக்கும் சூழல், கொலை, கொள்ளை குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இல்லையென்றால் டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டம்போல சட்டம்-ஒழுங்குக்கும் மக்கள் போராடும் நிலை உருவாகும் என்றும் எச்சரித்துள்ளார்.