தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களின் நிர்வாகம் மற்றும் கல்விச் செயல்பாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவலை தெரிவித்துள்ளது. பல பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படாததும், 40% ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதும் ஆய்வுகளின் தரத்தை பாதிப்பதாக அக்கட்சி மாநில செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, 21 மாநிலப் பல்கலைக்கழகங்களில் 16 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமிக்கப்படவில்லை. இது கவர்னர் ஆர்.என். ரவியின் நடவடிக்கைகளால் ஏற்பட்டிருப்பதாகவும், இந்த நிலைமை 2026 இறுதி வரை நீடித்தால் மேலும் பல பல்கலைக்கழகங்கள் தலைமையின்றி செயல்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட 8,867 ஆசிரியர் பணியிடங்களில் 5,296 மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதால், 40% பணியிடங்கள் காலியாக உள்ளன.
குறிப்பாக, சென்னை பல்கலைக்கழகத்தில் பல துறைகளில் ஒன்று அல்லது இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே நிரந்தரப் பணியில் உள்ளனர். 4 ஆய்வு மையங்களில் பேராசிரியர்களே இல்லை. அங்கீகரிக்கப்பட்ட 534 இடங்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவான ஆசிரியர்களே பணியாற்றுகின்றனர். இதனால், பேராசிரியர்களின் பணிச்சுமை அதிகரித்து, முனைவர் பட்ட மாணவர்களுக்கு உரிய கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது ஆய்வு வெளியீடுகளின் தரத்தையும் பாதிக்கிறது.
உயர்கல்வியின் மேம்பாட்டிற்காகவும், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும் தமிழ்நாடு அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. 16 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட வேண்டும், அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும், மேலும் ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிட்ட கால இடைவெளியில் தேர்வுகளை நடத்தி காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும், உயர்கல்வித் துறையில் மத்திய அரசின் தலையீடுகளுக்கு அடிபணியக் கூடாது என்றும் தமிழக அரசை அக்கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
