தமிழகத்தில் உள்ள அரசுப் பல்கலைக்கழகங்களின் நிர்வாகம் மற்றும் கற்றல் செயல்பாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பெ.சண்முகம் கவலை தெரிவித்துள்ளார். மத்திய அரசு மற்றும் ஆளுநரின் தலையீடுகளுக்கு தமிழக அரசு அடிபணியக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பல பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படாததாலும், 40% ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாலும் ஆய்வுகளின் தரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி காலத்திய நடவடிக்கைகளால் 21 பல்கலைக்கழகங்களில் 16-க்கு துணைவேந்தர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை. இந்த நிலை தொடர்ந்தால், 2026 இறுதிக்குள் 20 பல்கலைக்கழகங்கள் தலைமையின்றி செயல்படும் அபாயம் உள்ளது.
மாநிலப் பல்கலைக்கழகங்களில் அங்கீகரிக்கப்பட்ட 8,867 ஆசிரியர் பணியிடங்களில் 5,296 மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. இதனால் 40% பணியிடங்கள் காலியாக உள்ளன. சென்னை பல்கலைக்கழகத்தில் பல துறைகளில் ஒன்றிரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். ஆய்வு மையங்களில் பேராசிரியர்களே இல்லை. இதனால் பேராசிரியர்களின் பணிச்சுமை அதிகரித்து, முனைவர் பட்ட மாணவர்களுக்கு உரிய கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நிரந்தர நியமனங்கள் நடைபெறாத நிலையில், தற்காலிக விரிவுரையாளர்களைக் கொண்டே கற்பித்தல் பணிகள் நடக்கின்றன. இது மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும். எனவே, தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு, சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு, 16 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும். மேலும், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய 2708 உதவிப் பேராசிரியர்களுக்கான தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட்டு, அனைத்துக் காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்று பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
