ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளியான 'திரிஷ்யம்' திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. வெறும் ரூ.5 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம், ரூ.75 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இந்தப் படம் 'பாபநாசம்' என்ற பெயரில் தமிழிலும், மேலும் தெலுங்கு, கன்னடம், இந்தி, சீன மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.
தொடர்ந்து, 2021-ல் வெளியான 'திரிஷ்யம் 2' நேரடியாக ஓடிடியில் வெளியாகி, முதல் பாகத்தைப் போலவே அமோக வரவேற்பைப் பெற்றது. தற்போது, 'திரிஷ்யம் 3' திரைப்படம் உருவாகியுள்ளது. ஆசீர்வாத் சினிமாஸ் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ள இந்தப் படம், கடந்த 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
'திரிஷ்யம் 3' திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே ரூ.50.35 கோடி வசூலித்ததாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது 7 நாட்களில் ரூ.200 கோடி வசூலைக் கடந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த ஆண்டின் அதிகம் வசூலித்த மலையாளப் படங்களில் ஒன்றாக 'திரிஷ்யம் 3' இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் வசூல் சாதனை திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.