கர்நாடகாவில் 2023 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, முதல்வர் பதவிக்கு கடும் போட்டி நிலவியது. மூத்த தலைவர்களான சித்தராமையா, டி.கே.சிவக்குமார், ஜி.பரமேஷ்வர் ஆகியோருக்கு இடையே முதல்வர் பதவிக்கான இழுபறி நீடித்தது. இறுதியில், சித்தராமையா முதல்வராகவும், டி.கே.சிவக்குமாருக்கு துணை முதல்வர் பதவியும் வழங்கப்பட்டது. அப்போது, இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி வழங்கப்படும் என காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
தற்போது, சித்தராமையா முதல்வராகப் பொறுப்பேற்று மூன்றாண்டுகள் நிறைவடைந்த நிலையில், டி.கே.சிவக்குமாருக்கு முதல்வர் பதவியை வழங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து, டெல்லியில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் முதல்வர் மாற்றம் குறித்து ஆலோசனை நடைபெற்றது. இதில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சித்தராமையா, டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, சித்தராமையா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, இன்று காலை தனது இல்லத்தில் அனைத்து அமைச்சர்களுக்கும் சிற்றுண்டி விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த விருந்துக்குப் பிறகு, தனது ராஜினாமா முடிவை அவர் அறிவித்தார்.
கர்நாடகாவின் புதிய முதல்வராக டி.கே.சிவக்குமார் நாளை பதவியேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.