இந்தியாவிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஹஜ் புனித யாத்திரைக்கு செல்கின்றனர். இது வழக்கமாக 40 முதல் 45 நாட்கள் வரை நீடிக்கும். இந்த நிலையில், மத்திய அரசு தற்போது ஒரு புதிய, குறுகிய கால ஹஜ் பயணத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறிப்பாக தொழில் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
நீண்ட நாட்கள் பயணத்தில் இருக்கும்போது, தங்கள் தொழிலை கவனிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, சுமார் 20 நாட்கள் மட்டுமே நீடிக்கும் இந்த சிறப்பு ஹஜ் பயணத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த குறுகிய கால திட்டத்திலும், ஹஜ் யாத்திரையின் அனைத்து முக்கிய மத சடங்குகளும் அடங்கும் என மத்திய சிறுபான்மை நலத்துறை இணை அமைச்சர் திரு. ஜார்ஜ் குரியன் தெரிவித்துள்ளார்.
கொச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜார்ஜ் குரியன், 'இந்த சிறப்புத் திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் 10,000 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியும். அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய அரசு செய்துள்ளது. ஹஜ் யாத்திரை செல்லும் இஸ்லாமிய மக்களிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலேயே இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது' என்று கூறினார்.
இந்த புதிய திட்டம், நீண்ட நாட்கள் பயணிக்க முடியாதவர்களுக்கு ஹஜ் புனித யாத்திரையை மேற்கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. இது இஸ்லாமிய சமூகத்தினரிடையே பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.