புதுடெல்லி: பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.2.50 உயர்த்தப்பட்டுள்ளது. இது கடந்த 2 வாரங்களில் நான்காவது முறையாகும். மேற்கு ஆசியாவில் நிலவும் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை 50% அதிகரித்ததால், இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு தினசரி சுமார் ரூ.1,000 கோடி இழப்பு ஏற்பட்டது. இதை ஈடுசெய்ய, கடந்த 15-ம் தேதி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.3 உயர்த்தப்பட்டது. அதன்பிறகு, மே 19-ம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் தலா 90 பைசா அதிகரித்தது. மேலும், மே 23-ம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் 87 பைசாவும், டீசல் 91 பைசாவும் விலை உயர்ந்தது.
இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் நேற்று மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தின. இந்த நான்காவது விலை உயர்வால், சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.46 அதிகரித்து ரூ.107.77 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.57 அதிகரித்து ரூ.99.55 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சென்னையில் எரிபொருள் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களிலும் பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து புதிய உச்சங்களை பதிவு செய்து வருகின்றன.
மும்பையில் நடைபெற்ற சிட்பி-யின் 37வது ஆண்டு விழாவில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 'மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடி வெறும் ராஜதந்திர அல்லது புவிசார் அரசியல் பிரச்சினை மட்டுமல்ல, அது சாதாரண மக்களின் எரிபொருள் செலவுகளையும் அதிகரிக்கும். கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோதும், உடனடியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தவில்லை. மாறாக, இதன் மீதான கலால் வரிகள் குறைக்கப்பட்டன. இதன் மூலம் அரசுக்கு ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது' என்றார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், 'பணவீக்க மனிதர் மோடி மீண்டும் தாக்கியுள்ளார். உங்கள் பாக்கெட்டில் இருந்து அமைதியாக பணம் பறிப்பதற்காக, அவர்கள் பெட்ரோல்-டீசல் விலையை தவணை முறையில் உயர்த்துகிறார்கள்' என்று விமர்சித்துள்ளார். இதற்கிடையில், கூட்டுறவு வங்கிகளில் குறு விவசாயிகள் பெற்ற ரூ.50,000 பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.