2026 ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடி ஆட்டத்தால் கிரிக்கெட் உலகில் புதிய வரலாற்றை படைத்துள்ளார். போட்டியின் முதல் 3 ஓவர்களில் வெறும் 10 பந்துகளில் 36 ரன்கள் குவித்து ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தார். இந்த அதிரடியான ஆட்டத்தின் மூலம், நடப்பு ஐபிஎல் சீசனில் தனது ரன் எண்ணிக்கையை 600ஐ தாண்ட வைபவ், கிரிக்கெட் வரலாற்றில் பல முக்கிய சாதனைகளை முறியடித்து புதிய மைல்கற்களை எட்டியுள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் 600 ரன்களைக் கடந்த மிக இளம் வயது வீரர் என்ற பெருமையை 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி பெற்றுள்ளார். இதற்கு முன்னர் 2018-ல் ரிஷப் பண்ட் படைத்திருந்த சாதனையை இவர் தகர்த்துள்ளார். மேலும், பதின் பருவ வயதில் (Teenager) ஒரு டி20 தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற தேவ்தத் படிக்கல்லின் 580 ரன்கள் என்ற சாதனையையும் வைபவ் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
மிக முக்கியமாக, ஐபிஎல் தொடரில் ஒரே சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த கிறிஸ் கெயிலின் 14 ஆண்டுகால சாதனையை வைபவ் சூர்யவன்ஷி தகர்த்துள்ளார். 2012-ல் கிறிஸ் கெயில் அடித்த 59 சிக்ஸர்கள் சாதனையாக இருந்த நிலையில், தற்போது வைபவ் 60 சிக்ஸர்களுக்கும் மேல் அடித்து முதலிடம் பிடித்துள்ளார். மேலும், 16 பந்துகளில் அரைசதம் கடந்த வைபவ், சுரேஷ் ரெய்னாவின் 12 வருட ஐபிஎல் பிளே-ஆஃப் அதிவேக அரைசத சாதனையான 16 பந்துகளையும் சமன் செய்துள்ளார்.
தனது 15 வயதிலேயே உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு சிறப்பாக விளையாடும் வைபவ் சூர்யவன்ஷி, இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். எலிமினேட்டர் போன்ற அழுத்தமான போட்டியில் அவர் வெளிப்படுத்திய துணிச்சலான ஆட்டம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
