இந்தியா ஏ மற்றும் இலங்கை ஏ அணிகளுக்கு இடையேயான போட்டியில், இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி இலங்கை வீரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை நடைபெற்ற சூப்பர் ஓவர் ஆட்டத்தில் இந்தியா தோல்வியடைந்த நிலையில், 15 வயது இளம் வீரரான சூர்யவன்ஷி, இலங்கை வீரர் ஒருவரை கையால் தள்ளியுள்ளார். இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
புதிய தகவல்களின்படி, இந்த முத்தரப்பு தொடரில் தொடக்கம் முதலே சூர்யவன்ஷிக்கு எதிராக தொடர்ச்சியான சீண்டல்கள் (sledging) இருந்து வந்துள்ளன. இதன் உச்சகட்டமாகவே இந்த மோதல் வெடித்திருக்கலாம் என கூறப்படுகிறது. போட்டிக்குப் பிறகு, இலங்கை ஏ அணியின் வீரர் விஷென் ஹலம்பகே, சூர்யவன்ஷியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கிரிக்பஸ் இணையதளம் தெரிவித்துள்ளது. ஜூன் 9 அன்று நடைபெற்ற தொடரின் தொடக்க ஆட்டத்திலிருந்தே ஹலம்பகே, சூர்யவன்ஷியை கேலி செய்து வந்துள்ளார்.
திங்கட்கிழமை நடைபெற்ற போட்டியிலும் இந்த சீண்டல்கள் தொடர்ந்தன. குறிப்பாக, சூர்யவன்ஷி சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்ய களமிறங்கியபோது, 'வீட்டுக்குப் போ, இது ஐபிஎல் கிடையாது' போன்ற கேலிப் பேச்சுக்கள் அவரை நோக்கி கூறப்பட்டுள்ளன. சூர்யவன்ஷி பெரிய அளவில் ரன் குவிக்க முடியாத நிலையிலும், ஹலம்பகே தனது வார்த்தை தாக்குதலை நிறுத்தவில்லை என்றும், சூர்யவன்ஷி மற்றும் அவரது பேட்டிங் பார்ட்னர் சூர்யான்ஷ் ஷெட்கே இருவரையும் நோக்கி ஆவேசமாக பாய்ந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தத் தருணத்தில்தான் வைபவ் எதிர்வினையாற்றியுள்ளார். பின்னர், இலங்கையின் மூத்த சர்வதேச வீரரான நிரோஷன் டிக்வெல்லா தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.
இந்த சம்பவத்திற்காக, பல மூத்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தனிப்பட்ட முறையில் வருத்தம் தெரிவித்துள்ளதாகவும், வைபவ் சூர்யவன்ஷியைத் தொடர்பு கொண்டு பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் முத்தரப்பு தொடரில் பங்கேற்ற இலங்கை ஏ அணியைச் சேர்ந்தவர்கள் இல்லை என்றும், 2026 ஐபிஎல் தொடரில் சூர்யவன்ஷியின் சாதனைகளை கவனித்து வந்த மூத்த வீரர்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த அசம்பாவிதங்கள் நடந்த விதம் குறித்து அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும், அதனால் அவரிடம் விளக்கம் கூறியதாகவும் தெரிகிறது. இந்த மோதலுக்கு 'வீட்டுக்குப் போ' என்ற வார்த்தையே காரணம் என கூறப்படுகிறது. முன்னதாக, இலங்கை ஏ அணியின் சில வீரர்கள் இந்திய அணியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கருதியதாக செய்தி வெளியானது. இருப்பினும், அதிகாரப்பூர்வ மன்னிப்பு கோரப்பட்டதா என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை.