மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று பெய்த மழையின்போது, மரத்தின் கீழ் ஒதுங்கியிருந்த கூலித் தொழிலாளர்கள் மீது மின்னல் தாக்கியதில் 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிரிழந்தவர்கள் ராமுத்தாய், தனிக்கொடி, கணபதி என்றும், காயமடைந்தவர் வாசியம்மாள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த துயரச் சம்பவம் குறித்து தமிழக மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த 26.05.2026 அன்று சூலப்புரத்தில் ஏற்பட்ட இடிமின்னல் தாக்குதலில் 3 பெண்கள் உயிரிழந்ததும், ஒருவர் காயமடைந்ததும் மிகுந்த வேதனை அளிப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். முதல்-அமைச்சர் அண்ணனின் உத்தரவின் பேரில், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவரை இன்று அமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும், காயமடைந்தவரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்த அமைச்சர், அவருக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளையும் விரைந்து வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.