2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. கருத்துக்கணிப்புகளுக்கு மாறாக, த.வெ.க. கட்சி அதிக இடங்களை வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்கட்சிக்கு ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும், தி.மு.க. கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க. ஆட்சி அமைத்தது.
சட்டசபையில் த.வெ.க. அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் வாக்கெடுப்பின்போது, அ.தி.மு.க.வில் பெரும் பிளவு ஏற்பட்டது. அ.தி.மு.க.வின் 47 எம்.எல்.ஏ.க்களில், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், சி.வி. சண்முகம் உள்ளிட்ட 25 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்த 22 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இந்த திடீர் திருப்பத்தால் அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டது.
இந்த அரசியல் சூழலில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிலர் த.வெ.க.வில் இணைந்துள்ளனர். ஏற்கனவே மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்தியபாமா (தாராபுரம்) ஆகிய 3 பேர் தங்கள் எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்தனர். அதன் தொடர்ச்சியாக, இன்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்துள்ளார்.
இசக்கி சுப்பையா ராஜினாமா செய்ததை அடுத்து, அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முதல்-அமைச்சர் விஜய் ராஜினாமா செய்ததால் திருச்சி கிழக்கு தொகுதி காலியாக உள்ளது. தற்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 4 பேரின் ராஜினாமாவால், தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.