சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு, அவரது கட்சியின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அணியில் இருந்த மேலும் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஆதரவை இன்று தெரிவித்துள்ளனர். இதனால் சி.வி.சண்முகம் தரப்பு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
முன்னதாக, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் சில சட்டமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கினர். இவர்கள் சட்டப்பேரவையில் தவெக அரசுக்கு ஆதரவு அளித்து, அமைச்சராகும் கனவில் இருந்தனர். இருப்பினும், சட்டச் சிக்கல்கள் ஏற்படும் என்பதால் தவெக தலைமை இதனை ஏற்கவில்லை.
இதனைத் தொடர்ந்து, சி.வி.சண்முகம் தரப்பில் இருந்த மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகியோர் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். மேலும் சில சட்டமன்ற உறுப்பினர்கள் தவெகவுக்கு செல்வார்கள் என்ற தகவல்களும் வெளியாகின.
இந்நிலையில், சி.வி.சண்முகம் தரப்பிலிருந்து 5 சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுச்செயலாளர் பழனிசாமியை நேரில் சந்தித்து தங்களது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளனர். நத்தம் விஸ்வநாதன், திருத்தணி அரி, புவனகிரி அருண் மொழித்தேவன், பழனி ரவி மனோகரன், ஓசூர் பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இந்த திடீர் திருப்பத்தால் சி.வி.சண்முகம் தரப்பு அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், காமராஜ், அன்பழகன், மரகதம் வெற்றிவேல், சேகர், ராகேஷ், விஜயபாஸ்கர், வீரமணி, லீமா ரோஸ் ஆகியோர் இன்னும் பழனிசாமியை சந்திக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமாவை ஏற்கக் கூடாது என சட்டப்பேரவைத் தலைவரிடம் இபிஎஸ் தரப்பினர் மனு அளித்துள்ளனர்.
