அதிமுகவில் இருந்து நிர்வாகிகள் பலர் விலகிச் செல்லும் நிலையில், 'போகிறவர்கள் போகட்டும், என் சொத்துக்களை பாதுகாக்க 8% வாக்குகள் போதும்' என எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, 'அரசியல் எதிர்காலம் வேண்டுமென்றால் அதிமுகவிலிருந்து வெளியேறுங்கள். சொந்த கட்சி, தன்னை முதலமைச்சராகவும், பொதுச்செயலாளராகவும் ஆக்கிய கட்சி. ஆனாலும், அக்கட்சியின் தலைவர்கள், எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் மாற்றுக்கட்சிக்கு செல்கிறார்கள். இது குறித்து கிஞ்சித்தும் கவலையோ அக்கறையோ இல்லாமல், அவர்கள் வெளியேறுவதை மகிழ்ச்சியாக ரசிக்கும் ஒரே தலைவர் எடப்பாடி பழனிச்சாமியாகத்தான் இருப்பார். அவரது நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்தால், அதிமுக கரைவதை அவர் விரும்புவதாகவே புரிந்து கொள்ள முடியும்' என்றும் சவுக்கு சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எடப்பாடிக்கு நெருக்கமான ஒரு தொழில் அதிபர், 'இப்படி கட்சி நிர்வாகிகள் வெளியேறுவதை தடுக்க ஏதாவது செய்யுங்கள்' என்று கேட்டபோது, 'போகிறவர்கள் போகட்டும். என் சொத்துக்களை பாதுகாக்க 8 பர்சென்ட் வாக்குகள் போதும்' என்று எடப்பாடி கூறியதாக சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார். மற்றொருவரிடம், 'யார் போனாலும் போகட்டும். வைகோ 20 வருடமாக மதிமுகவை நடத்தவில்லையா. இருக்கும் ஆட்களை வைத்து கட்சியை நடத்திக் கொள்கிறேன்' என்றும் எடப்பாடி கூறியதாகக் கூறியுள்ளார்.
இதுதான் எடப்பாடி பழனிச்சாமியின் இன்றைய மனநிலை என்றும், அதிமுகவை மீண்டும் வலிமையாக்கி தேர்தலில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இல்லை என்றும் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார். வேறு யாரையும் தலைமை பதவிக்கு வரவிடாமல், ஆக்டோபஸ் போல கட்சியை ஆக்கிரமித்து, அக்கட்சியை அழிக்கும் வரை பழனிச்சாமி ஓய மாட்டார் என்றும், அரசியல் எதிர்காலம் வேண்டுவோர் இனியும் அதிமுகவில் தொடர்வதில் பொருளில்லை என்பதை உணர்ந்து முடிவெடுங்கள் என்றும் அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.