பொது விநியோகத்திற்காக ஒதுக்கப்பட்ட ரேசன் அரிசியை, முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் என்ற பெயரில் சட்டவிரோதமாக விநியோகிப்பதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தலைவர் டி.டி.வி. தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். மதுரை மேற்கு தொகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. S.R. தங்கப்பாண்டி மீது பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளதாக டி.டி.வி. தினகரன் தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார். பொது விநியோக திட்டத்தின் மூலம் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரேசன் அரிசியை, நலத்திட்ட உதவிகள் என்ற பெயரில் அவர்களுக்கே விநியோகம் செய்திருப்பது சட்டவிரோதம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரே ரேசன் அரிசியை சட்டவிரோதமாக கடத்தி விநியோகம் செய்தாரா அல்லது கடத்தல் கும்பலிடம் இருந்து பெற்று விநியோகம் செய்தாரா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளார். இது குறித்து விரிவாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.
ரேசன் அரிசியை கட்சி நலத்திட்ட உதவிகளாக வழங்குவது கண்டிக்கத்தக்கது என்றும், இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், இது போன்ற சட்டவிரோத செயல்கள் தொடரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.