தூத்துக்குடி பாத்திமாநகரைச் சேர்ந்த மொகித் (23) என்பவர், தனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து ஒரு 25 வயது இளம்பெண்ணை மீன்பிடி துறைமுகம் அருகே அழைத்துச் சென்று, அவரது விருப்பத்திற்கு மாறாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அந்தப் பெண்ணிடம் இருந்து ரூ.2,500 ரொக்கம், ஒரு செல்போன் மற்றும் 2 வெள்ளி மோதிரங்களையும் பறித்துச் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக அந்தப் பெண் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பாலியல் வன்கொடுமை தொடர்பான இந்த வழக்கில், தூத்துக்குடி நகர துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது.
விசாரணையின் அடிப்படையில், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மொகித், ரிதீஷ் மற்றும் ஜெயக்குமார் திலோத் பெர்லின் (21) ஆகிய மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.