மேகேதாட்டு அணை விவகாரத்தில், காவிரி நீரின் மீது தமிழகத்தின் உரிமையைப் பாதுகாக்க அரசியல் வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும், இந்த போராட்டத்தில் தமிழ்நாடு அரசுடன் காங்கிரஸ் கட்சி உறுதியாக நிற்கும் என்றும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது: 'மேகேதாட்டு அணை விவகாரத்தில் கட்சி அரசியலை நிறுத்த வேண்டிய நேரம் இது. இது எந்த ஒரு கட்சியின் பிரச்சினையும் அல்ல, தமிழ்நாட்டின் உரிமை, விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் எதிர்கால தலைமுறையின் நீர் பாதுகாப்பை சார்ந்த பிரச்சினை ஆகும். உச்ச நீதிமன்ற தீர்ப்புகளையும், காவிரி மேலாண்மை ஆணைய விதிகளையும் மீறி தமிழகத்தின் அனுமதி இல்லாமல் எந்த அணையும் கட்ட முடியாது.
தமிழகத்தின் உரிமைக்கான இந்த போராட்டத்தில், தமிழ்நாடு அரசுடன் நாங்கள் உறுதியாக நிற்கிறோம். அனைத்து கட்சிகளும், அனைத்து இயக்கங்களும், மக்கள் அனைவரும் ஒன்றாக குரல் கொடுத்து நம் உரிமையை பாதுகாக்க வேண்டிய தருணம் இது. தமிழ்நாட்டின் நலன் முதலில், அரசியல் பின்னால்' என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேகேதாட்டு அணை விவகாரத்தில் சட்டப் போராட்டத்தை தீவிரப்படுத்த முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் இந்த நிலைப்பாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது. தமிழகத்தின் நீர் உரிமையை பாதுகாப்பதில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை இந்த விவகாரம் உணர்த்துகிறது.