பழநி: கொடைக்கானல் அருகே உள்ள புல்லாவெளி அருவியில், 'ரீல்ஸ்' எடுக்கும் மோகத்தில் இளைஞர்கள் தடையை மீறி ஆபத்தான முறையில் குளித்து வருவதால் பெரும் அசம்பாவிதம் நிகழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்த அருவி மற்றும் அதனைச் சுற்றியுள்ள சில அருவிகள் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி வரை தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆபத்து மிகுந்த பகுதியில் அமைந்துள்ள புல்லாவெளி அருவி, ஆடலூர் மற்றும் பன்றிமலைப் பகுதிகளில் பெய்யும் மழைநீரால் உருவாகிறது. இங்கு கொட்டும் நீர், திண்டுக்கல் மாநகராட்சி மக்களின் குடிநீர் ஆதாரமான ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தை சென்றடைகிறது. அருவியின் அழகை அதன் மேலிருந்து மட்டுமே ரசிக்க முடியும். பல நூறு அடி கீழே இறங்கினால் மட்டுமே அருவியில் குளிக்க முடியும் என்றாலும், ஆபத்து காரணமாக இங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயரால் அமைக்கப்பட்ட மரத் தொங்கு பாலமான 'ஆடு பாலம்' வழியாகவே அருவிக்கு செல்ல வேண்டும்.
தற்போது போதிய பராமரிப்பின்றி ஆபத்தான நிலையில் உள்ள இந்தப் பாலம், இயற்கை அழகு நிறைந்த இப்பகுதிக்கு வரும் வெளி மாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது. போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததால், இதுவரை 14 பேர் இங்கு தவறி விழுந்தும், நீரில் மூழ்கியும் உயிரிழந்துள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக, புல்லாவெளி அருவி, அஞ்சு வீடு அருவி மற்றும் அரசால் அனுமதிக்கப்படாத வன அருவிகள் அனைத்தும் சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும், 'ரீல்ஸ்' எடுக்கும் மோகத்தில் வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வரும் இளைஞர்கள், தடையை மீறி அருவிக்குச் சென்று ஆபத்தை விலைக்கு வாங்குகின்றனர். மேலும், ஆபத்தான முறையில் புகைப்படங்களும் எடுக்கின்றனர். கோடை விடுமுறையைக் கொண்டாட வரும் இளைஞர்களின் இந்தச் செயல்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், புல்லாவெளி அருவியை சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் வகையில் சாலை வசதி, படிக்கட்டுகள், உடை மாற்றும் அறைகள் அமைக்கும் பணிகள் ரூ.3 கோடியில் நடைபெற்று வருவதாகவும், பணிகள் நிறைவடையாத நிலையில் தடையை மீறுவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும், சுற்றுலா வழிகாட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.
