சென்னை: ஒலிம்பிக்கில் பங்கேற்க ஆர்வமுள்ள இரண்டு விளையாட்டு வீரர்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5.80 லட்சம் நிதியுதவிக்கான காசோலைகளை பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழங்கினார். சென்னை நேரு விளையாட்டரங்கில் இன்று (25.05.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த உதவி வழங்கப்பட்டது.
திறமையான வீரர்களை கண்டறிந்து அவர்களை சாதனையாளர்களாக உருவாக்க விளையாட்டு மேம்பாட்டுத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். காதுக் கேட்கும் திறன் குறைந்தவர்களுக்கான ஒலிம்பிக்கில் பங்கேற்று, எதிர்வரும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல ஆர்வமுள்ள தடகள வீராங்கனை செல்வி சமீஹா பர்வீன் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்ற நீச்சல் வீரர் அபிஷேக் ஆகியோர் நிதி உதவி கோரியிருந்தனர். இவர்களின் பயிற்சி, உபகரணங்கள் மற்றும் ஊட்டச்சத்து தேவைகளுக்காக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒலிம்பிக் போட்டிகளிலும், ஏனைய பன்னாட்டு அளவிலானப் போட்டிகளிலும் பதக்கம் வெல்லும் திறன் கொண்ட விளையாட்டு வீராங்கனை சமீஹா பர்வீனுக்கு ரூ.3 லட்சமும், நீச்சல் வீரர் அபிஷேக்கிற்கு ரூ.2.80 லட்சத்திற்கான காசோலையும் அமைச்சர் வழங்கினார். திறமையான வீரர்களுக்கு தேசிய மற்றும் உலக அளவில் பங்கேற்க தேவையான பொருளாதார உதவிகளை தமிழக அரசு தொடர்ந்து செய்யும் என்றும் அவர் உறுதியளித்தார்.
விளையாட்டு வீரர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் தங்களின் கோரிக்கைகளை நாள்தோறும் காலை 7 முதல் 10 மணி வரை என்னை நேரில் சந்திக்கலாம் என்றும், விளையாட்டுத் துறை உயர் அலுவலர்களும் காலை 7 மணி முதல் நேரு உள்விளையாட்டரங்கில் வீரர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண உடன் பணிபுரிவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள விளையாட்டரங்கங்கள், பயிற்சிக் கூடங்கள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு செயலாளர் சஜ்ஜன்சிங் ரா சவான், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.