பள்ளிக் கல்வித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ராஜ்மோகனுக்கு திரைத்துறை ஒதுக்கப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்து நடிகர் விஷால் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள நடிகர் கிருஷ்ணா, 'நம் முதல்வரும் புதியவர்தான்' என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் விஷாலின் பதிவை மேற்கோள் காட்டி, தனது எக்ஸ் தளத்தில் நடிகர் கிருஷ்ணா பதிவிட்டுள்ளார். அதில், 'விஷால் அவர்களே, அமைச்சர் ராஜ்மோகனையோ அல்லது அவரது திறன்களையோ குறைத்து மதிப்பிடாதீர்கள். அவர் தனது துறையை எவ்வாறு நிர்வகிக்கப் போகிறார் என்பதை அறியாமலே அவரது அமைச்சகத்தின் செயல்பாடுகளை உங்களால் எவ்வாறு மதிப்பிட முடியும்?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், 'நீங்கள் முன்வைத்த 3 பரிந்துரைகள் நியாயமானவையே. ஆனால், தயாரிப்பாளர்கள் சிறிய பட்ஜெட் படங்களை உருவாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு பேட்டி அளித்ததும் நீங்கள் தானே? நம் முதல்வரும் தனது பணிக்குப் புதியவர்தான். ஆனால், அந்த விஷயத்தில் மட்டும் உங்களுக்கு ஏன் எந்தக் கருத்தும் இல்லை. எனக்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டபோது, நீங்கள் என்னை எப்படி நட்டாற்றில் கைவிட்டுவிட்டீர்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கும் என்று நம்புகிறேன். தேர்தல் முடிவடையும் வரை காத்திருக்குமாறு வெற்றிக்கு முன்பு கூறினீர்கள். ஆனால், வெற்றி பெற்ற பிறகோ, அந்தப் பிரச்சினையில் இருந்து நீங்கள் நழுவிக் கொண்டீர்கள். வாருங்கள், ராஜ்மோகனுக்கு ஒரு வாய்ப்பளிப்போம்' என்றும் நடிகர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், 'மேகேதாட்டு திட்டம் குறித்த டி.கே.சிவகுமாரின் பேச்சை முதல்வர் விஜய் கண்டிக்க வேண்டும்' என்றும் சீமான் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
