இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கும் நிலையில், தனது கிரிக்கெட் பயணம் குறித்தும், தமிழ்நாடு அணிக்கு திரும்பாதது குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார். தமிழக மைதானங்களில் தொடங்கி உலகக் கோப்பை வரை நீண்ட அவரது பயணம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
இன்னும் சில ஆண்டுகள் விளையாடும் தகுதி இருந்தும், 35 வயதிலேயே ஓய்வு பெற்றது ஏன் என்ற கேள்விக்கு விஜய் சங்கர் நிதானமாக பதிலளித்தார். 'என்னால் இன்னும் சில ஆண்டுகள் சிறப்பாக விளையாட முடியும். ஆனால், கிரிக்கெட்டைத் தாண்டி மற்ற விஷயங்களையும் ஆராய இதுவே சரியான நேரம் எனத் தோன்றியது. கடந்த 3 அல்லது 4 ரஞ்சி கோப்பை சீசன்களில் நான் நன்றாகவே விளையாடினேன். ஆனால், அதற்கடுத்த கட்டத்திற்கு எந்த முன்னேற்றமும் இல்லை. அங்கேயே தேங்கி நிற்பதை விட, வெளியே வந்து புதிய வாய்ப்புகளைத் தேடலாம் என முடிவு செய்தேன்' என அவர் கூறினார்.
தனது 25 ஆண்டுகால கிரிக்கெட் பயணம் குறித்துப் பேசிய விஜய் சங்கர், 'கிரிக்கெட் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்துள்ளது. 10 வயதில் தொடங்கி 35 வயது வரை இந்த 25 ஆண்டுகள் மிகவும் ஸ்பெஷல். மாவட்ட அளவிலான போட்டிகளில் தொடங்கி மாநில அணி வரை வந்தேன். 21 வயது வரை ஆஃப்-ஸ்பின்னராக இருந்த நான், தமிழக ரஞ்சி அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காகவே மீடியம் பேசராக மாறினேன். அது எனது வாழ்க்கையில் எடுத்த மிகப்பெரிய முடிவு. பல காயங்கள், அறுவை சிகிச்சைகளை நான் சந்தித்திருக்கிறேன். ஆனால் திரும்பிப் பார்க்கும்போது, எதற்கும் வருத்தமில்லை. கிரிக்கெட் எனக்குக் கொடுத்த மகுடங்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்' என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகச் சிறப்பாக விளையாடியும், இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் விஜய் சங்கரை எந்த அணியும் எடுக்கவில்லை. இது குறித்துப் பேசிய அவர், 'ஏலத்தில் எவரும் என்னை எடுக்காதது சற்று ஏமாற்றமாக இருந்தது. ஐபிஎல் தொடரைத் தான் நான் பெரிதும் எதிர்பார்த்தேன். ஆனால், வாழ்க்கையில் இதையெல்லாம் கடந்துதான் போக வேண்டும். விளையாட்டை நேசிப்பவன் என்பதால், தொடர்ந்து களத்தில் இருப்பதுதான் எனக்கு முக்கியம்' என்றார். திரிபுரா அணிக்காக விளையாடிய பிறகு மீண்டும் தமிழக அணிக்குத் திரும்பலாமா என யோசித்ததாகவும், ஆனால் சில நேரங்களில் பழைய இடத்திற்கே மீண்டும் செல்வது சரியாக இருக்காது என்றும், தமிழகத்திற்காக விளையாட வேண்டும் என்பதுதான் தனது தீராத ஆசை என்றும், 14 ஆண்டுகள் அந்தப் பெருமை தனக்குக் கிடைத்தாலும் ஒருமுறை கூட ரஞ்சி கோப்பையை வெல்ல முடியவில்லை என்பது ஒரு குறையாகவே உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
2019 உலகக் கோப்பை அணியில் அம்பதி ராயுடுவுக்குப் பதிலாக விஜய் சங்கர் சேர்க்கப்பட்டதும், அவர் ஒரு 3டி (முப்பரிமாண) வீரர் என வர்ணிக்கப்பட்டதும் அப்போது பெரும் புயலைக் கிளப்பியது. இது குறித்து வெளிப்படையாகப் பேசிய அவர், 'நிச்சயமாக அந்த விமர்சனங்கள் என் மீது ஒரு சதவீதமாவது தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மைதான். உலகக் கோப்பை அணியில் இடம் பிடித்து, பாகிஸ்தானுக்கு எதிராகச் சிறப்பாகப் பந்துவீசிய பிறகு காயம் ஏற்பட்டது துரதிர்ஷ்டவசமானது. 2020-ல் இந்தியா ஏ அணிக்காக விளையாடிய பிறகு எனக்கு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அது ஏமாற்றமாக இருந்தாலும், கிரிக்கெட்டை அனுபவித்து விளையாடுவதே எனக்குப் பிடிக்கும்' என்றார். தனது கிரிக்கெட் வாழ்க்கையின் முக்கியமான தருணங்களாக, தமிழக அணிக்காகவும், இந்திய அணிக்காகவும் தொப்பி வாங்கிய தருணங்கள், உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக அறிமுகமானது, இந்தியாவின் 500-வது ஒருநாள் போட்டியில் கடைசி ஓவரில் 10 ரன்களைத் தடுத்து வெற்றி தேடித்தந்தது போன்ற நினைவுகளை அவர் பகிர்ந்து கொண்டார்.
வெளிநாட்டு டி20 லீக் தொடர்களில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் அதனைப் பயன்படுத்துவேன் என்றும், பயிற்சியாளர் பணிக்கான லெவல் 2 உரிமத்தை ஏற்கனவே முடித்துவிட்டதால், பயிற்சியாளர் ஆவதில் பெரும் ஆர்வம் உண்டு என்றும், அதுவரை விளையாட்டை அனுபவிப்பேன் என்றும் அவர் கூறினார். தனக்கு அளிக்கப்பட்ட 3டி கிரிக்கெட்டர் என்ற முத்திரை குறித்துப் பேசிய அவர், 'தெரிந்தோ தெரியாமலோ அந்தப் பெயர் எனக்கு நிலைத்துவிட்டது. அதனை நான் நேர்மறையாகவே எடுத்துக் கொள்கிறேன். ஒவ்வொருவரின் பயணமும் வித்தியாசமானது. என்னுடைய சவாலான பயணம் எனக்கு மனநிறைவைத் தந்துள்ளது' என விடைபெற்றார். திறமையான ஒரு ஆல்-ரவுண்டரை இந்திய கிரிக்கெட் இழந்திருந்தாலும், அவரது அனுபவம் அடுத்த தலைமுறை வீரர்களுக்குப் பயிற்சியாளர் வடிவில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.
Could have played for a few more years