இந்தியாவின் 15 வயது இளம் தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்சியின் பெரிய போட்டிகளில் சிறப்பாக செயல்படும் மனநிலையை கொண்டுள்ளார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் மேட் பிரையர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இந்த இடதுகை பேட்ஸ்மேன், ஐபிஎல் 2026 சீசனில் 48.50 சராசரி மற்றும் 237.30 ஸ்டிரைக் ரேட்டுடன் 770-க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்து அசாத்திய திறமையை வெளிப்படுத்தியிருந்தார். இருப்பினும், அவரது ஒட்டுமொத்த ரன்களையும் தாண்டி, நாக்-அவுட் போன்ற முக்கியமான போட்டிகளில் அழுத்தங்களை எதிர்கொண்டு விளையாடும் சூர்யவன்சியின் திறன் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான வெற்றியிலும், குவாலிஃபையர் 2 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான தோல்வியிலும், இவர் 200-க்கும் மேற்பட்ட ஸ்டிரைக் ரேட்டில் அடுத்தடுத்து 90-க்கும் அதிகமான ரன்களைக் குவித்தார்.
இதற்கு முன்னதாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிரான அண்டர்-19 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வெறும் 80 பந்துகளில் 175 ரன்கள் குவித்து, இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல மிக முக்கிய காரணமாக அமைந்தார். சூர்யவன்சியின் அசாத்திய திறமை மற்றும் மனவலிமை குறித்து பேசிய மேட் பிரையர், 'அவரிடம் உள்ள அசாதாரண திறமையுடன் சேர்த்து, ஸ்டீவ் வாக் போன்ற ஒரு வலுவான மனநிலையும் மன உறுதியும் அவரிடம் உள்ளது. யாரும் பார்க்காத சாதாரண போட்டிகளில் அவர் இதைச் செய்யவில்லை. ஒட்டுமொத்த உலகமே உற்று நோக்கும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும், ஐபிஎல் நாக்-அவுட் போட்டிகளிலும் அவர் இந்த சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். பெரிய ஆட்டங்களில் வெற்றியைத் தேடித்தரும் அவரது இந்த பங்களிப்புகள், அவரிடம் உள்ள வலுவான மனநிலையைக் காட்டுகின்றன. ஒருவேளை அவருக்கு பேட்டிங் செய்வது மிக எளிதாக இருப்பதால், அவர் எந்த அழுத்தத்திற்கும் உள்ளாகாமல் தொடர்ந்து விளையாடுகிறார்' என்று புகழாரம் சூட்டினார்.
உலக கிரிக்கெட்டில் மிகவும் அனுபவம் வாய்ந்த மற்றும் வரலாற்றின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களான பும்ரா மற்றும் கம்மின்ஸின் பந்துகளை அடிக்க முடியாமல் சர்வதேச முன்னணி வீரர்களே திணறி வருகின்றனர். ஆனால், இந்த இளம் வீரரோ மைதானத்திற்குள் வந்து, அவர்களின் பந்துகளை மிக சாதாரணமாக சிக்ஸர்களுக்கு பறக்கவிடுகிறார். அவர் மற்ற வீரர்களை விட ஆட்டத்தை மிகவும் எளிதாக்குகிறார் என்று பிரையர் மேலும் கூறினார். 2026 அண்டர்-19 உலகக் கோப்பை மற்றும் ஐபிஎல் 2026 ஆகிய இரண்டு தொடர்களிலும் சூர்யவன்சி தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரில் எவ்வித அழுத்தமும் இன்றி தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவதும், இம்பாக்ட் பிளேயர் விதியால் பெரும்பாலும் ஃபீல்டிங் செய்யாமல் இருப்பதுமே வைபவ் சூர்யவன்சிக்கு கிடைத்த மிகச்சிறந்த கனவுச் சூழல் என்று மேட் பிரையர் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்களின் ஃபீல்டிங் இன்னிங்ஸின் போது 15 வயதான சூர்யவன்சிக்கு பதிலாக பெரும்பாலும் இம்பாக்ட் பிளேயரையே பயன்படுத்தியது. 'இந்த இளைஞர் உண்மையிலேயே ஒரு கனவு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். அவர் தொடக்க வீரராக களம் புகுந்து, சிக்ஸர்களும் பவுண்டரிகளுமாக விளாசித் தள்ளுகிறார், அதற்காகப் பாராட்டுகளையும் பெறுகிறார். ஒருவேளை அவர் விரைவில் ஆட்டமிழந்தாலும், அது ஒரு பெரிய குறையாகப் பார்க்கப்படுவதில்லை. அதன்பிறகு அவர் ஃபீல்டிங் செய்யவும் மைதானத்திற்குள் வருவது இல்லை. இவ்வளவு பணம் புழங்கும் தற்போதைய கிரிக்கெட் யுகத்தில், பந்துகளை சிக்சருக்கு மட்டும் அடித்துவிட்டு, ஃபீல்டிங் கூட செய்யாமல் அவர் கோடிக்கணக்கில் சம்பாதிக்கப் போகிறார். இது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம்' என்று பிரையர் மேலும் கூறினார். இந்த ஆண்டில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் சூர்யவன்சி காட்டிய அசாத்திய ஆட்டம், சமீபத்தில் நடந்து முடிந்த அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர் மற்றும் வரவிருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு முதன்முறையாக வாய்ப்பைப் பெற்றுத் தந்துள்ளது.