தமிழகத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்த பார்களுக்கு, உரிமம் புதுப்பிக்க மேலும் 3 மாத கால அவகாசம் வழங்கி டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது மதுப்பிரியர்கள் மத்தியில் சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலம் முழுவதும் மொத்தம் 2,640 டாஸ்மாக் பார்கள் இயங்கி வருகின்றன. இந்த பார்களுக்கான உரிமங்கள் நேற்றுடன் காலாவதியாகின. இந்நிலையில், புதிய டெண்டர் நடைமுறைகள் மேற்கொள்ளப்படாததால், தற்போதைய திமுக அரசு, இந்த பார்களை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்னர், இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், திமுக அரசால் ஏற்கனவே ஆறு மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய டெண்டர் விடும் வரை தற்போதைய பார்களை தொடர்ந்து இயக்க இந்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், டாஸ்மாக் பார்களின் உரிமையாளர்கள் தற்போதைக்கு தங்களது தொழிலை தொடர்ந்து நடத்த முடியும். இந்த நீட்டிப்பு, மதுபானக் கடைகளின் வருவாயிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாஸ்மாக் நிர்வாகத்தின் இந்த திடீர் உத்தரவு, பார்களின் உரிமையாளர்களுக்கு ஒரு தற்காலிக நிவாரணமாக அமைந்துள்ளது. புதிய டெண்டர் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.