2028 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டன் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இது குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ஐ.சி.சி. இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
சூர்யகுமார் யாதவ் அடுத்த இரண்டு ஆண்டுகளில் எவ்வாறு செயல்படுகிறார் என்பதைப் பொறுத்து இந்திய அணி புதிய கேப்டனைத் தேர்வு செய்யக்கூடும் என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இருப்பினும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக கேப்டனாக செயல்பட்ட அனுபவம் கொண்ட சஞ்சு சாம்சன், தலைமைப் பதவிக்கு ஒரு வலுவான போட்டியாளராக உருவெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சஞ்சு சாம்சன் அணியில் நிச்சயம் இடம்பெறுவார் என்றும், டாப் ஆர்டரில் அதிரடியாக விளையாடும் திறன்கொண்டவர் என்றும் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். மேலும், அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் சஞ்சு சாம்சனின் கேப்டன்சி திறனை மேம்படுத்துவதற்கான ஒரு தொடக்கமாகவே தற்போதைய அவரது செயல்பாடுகளைப் பார்ப்பதாகக் தெரிவித்துள்ளார்.
இந்த சீசனில் சஞ்சு சாம்சனின் ஆட்டம், டி20 உலகக்கோப்பையில் முக்கியப் போட்டிகளில் அவர் தனி ஒருவராக இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்ற விதம், மற்றும் ஐ.பி.எல். தொடரில் அவர் வெளிப்படுத்தும் முதிர்ச்சியான ஆட்டம் ஆகியவை வருங்கால தலைமைப் பொறுப்பிற்கு அவரை ஒரு சிறந்த தேர்வாகக் காட்டுவதாக ரவி சாஸ்திரி தனது பேட்டியில் விரிவாகக் கூறியுள்ளார்.