கோவையின் சூலூர் அருகே அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. ஒரு கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி, கடைக்குச் சென்றபோது காணாமல் போனார். பெற்றோரும் உறவினர்களும் தேடியும் கிடைக்காத நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சிறுமியைக் கடத்திச் சென்றதாகக் கூறப்பட்டது. இதுகுறித்து சூலூர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
காவல்துறையினர் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, சிறுமி கடத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கண்ணம்பாளையம் குளத்தின் கரையோரம் உள்ள முட்புதரில் சிறுமியின் உடல் கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யாபாரதி, கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். சிறுமி கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டு, பின்னர் உடல் முட்புதரில் வீசப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததாகவும், தற்போதைய ஆட்சியிலும் அதே நிலை தொடர்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். 'ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை' என்பதற்கு இந்த சம்பவமே சான்று என வேலுமணி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகளா என எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார். உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த சம்பவம் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து மீண்டும் ஒருமுறை கேள்விகளை எழுப்பியுள்ளது.