யூடியூபர் சவுக்கு சங்கர், திமுக அரசு மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக அவதூறு பரப்பியதாகக் கைது செய்யப்பட்டு, நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜராகாததால், தனிப்படை போலீசாரால் ஆந்திராவில் கைது செய்யப்பட்டு மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதன் பின்னர், அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து, குண்டர் சட்ட வழக்குகளை மறுஆய்வு செய்யும் ஆலோசனைக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து, புழல் சிறையில் இருந்த சவுக்கு சங்கர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
சிறையிலிருந்து வெளியே வந்த சவுக்கு சங்கர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தமிழ்நாடு மக்கள் அற்புதமான தீர்ப்பை வழங்கியுள்ளனர். இந்தத் தீர்ப்பைப் புரிந்துகொண்டு முதலமைச்சர் விஜய் தற்போது ஆட்சி புரிந்து வருவதை அறிந்து கொண்டேன். தமிழக வெற்றிக் கழகம் அமைத்துள்ள கூட்டணி ஆட்சி, ஐந்து ஆண்டு காலத்தை முழுமையாக நிறைவு செய்து, மக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்ய வேண்டும் என்பதே எனது கோரிக்கை” என்று தெரிவித்தார்.
மேலும் அவர், “குண்டர் சட்டத்தை ரத்து செய்ய முதலமைச்சர் விஜய் நேரடியாகத் தலையிட்டதால்தான் நான் விரைவாக விடுவிக்கப்பட்டேன். கடந்த 4 ஆண்டுகளாக மக்கள் பார்த்த நிகழ்வுகளால்தான் கொளத்தூரில் திமுக தலைவர் ஸ்டாலின் தோல்வியடைந்தார். ஊடகவியலாளர்களைச் சிறையில் அடைத்த கொடுங்கோல் திமுக ஆட்சியைப் போல வேறு எதுவும் கிடையாது. முதலமைச்சர் விஜய் ஊடகங்களில் வரும் அனைத்தையும் கவனித்து திட்டங்களைச் செய்து வருகிறார். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளதால் ஜனநாயகம் மேலும் வலுப்பெறும். கூட்டணிக் கட்சிகளே தவறுகளைச் சுட்டிக்காட்டுவார்கள். ஊடக சுதந்திரமும் இருக்கும்” என்று கூறினார்.