திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே சட்டவிரோதமாக தங்கியிருந்த 25 வங்கதேச நாட்டினருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து திருப்பூர் மாவட்ட சிறப்பு அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம், பல்லடம் கரைப்புதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பின்னலாடை நிறுவனத்தில் வங்கதேச நாட்டினர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, போலீசார் நடத்திய சோதனையில் அப்துல் ஹாலிக், அமினல் இஸ்லாம் உள்ளிட்ட 25 வங்கதேச நாட்டினர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து வங்கதேசத்திற்கான அடையாள அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைதானவர்கள் மீது திருப்பூர் மாவட்ட சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி சுரேஷ் நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தார். அதில், குற்றம் சாட்டப்பட்ட 25 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
மேலும், அபராதத் தொகையை செலுத்த தவறினால், கூடுதலாக ஒரு மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். இந்த தீர்ப்பு சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டினருக்கு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.