மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன், உத்தரப் பிரதேசத்தைப் போல் புல்டோசர் நடவடிக்கை தொடங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக, சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு என்ற பெயரில் வீடுகளும் கடைகளும் இடிக்கப்படுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னறிவிப்பின்றி இரவோடு இரவாக கட்டிடங்கள் இடிக்கப்படுவது பாஜக ஆளும் மாநிலங்களில் வாடிக்கையாகி வரும் நிலையில், தற்போது மேற்கு வங்கத்திலும் இதே கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது.
நேற்று இரவு, கொல்கத்தாவின் பரபரப்பான ஹவுரா ரயில் நிலையத்திற்கு அருகே அதிகாரிகள் அதிரடியாக செயல்பட்டனர். சட்டவிரோத ஆக்கிரமிப்பு எனக்கூறி, வியாபாரிகளின் கடைகள் உட்பட பல கட்டிடங்களை இரவோடு இரவாக புல்டோசர்களைக் கொண்டு இடித்து அப்புறப்படுத்தினர். இந்த நடவடிக்கையின்போது, மக்கள் எதிர்ப்பைக் கட்டுப்படுத்த மத்திய ரிசர்வ் படை மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
இந்த புல்டோசர் நடவடிக்கைகள் குறித்து, பாஜக தலைவர் திலீப் கோஷ் கோரக்பூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'மாநிலம் முழுவதும் புல்டோசர் நடவடிக்கைகள் தொடரும். சட்டவிரோத கட்டுமானம் அல்லது ஆக்கிரமிப்பு எங்கு நடந்தாலும், அங்கு புல்டோசர்கள் பயன்படுத்தப்படும். மேற்கு வங்கத்தில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்த முதல் நாளிலிருந்தே இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் தாங்களாகவே வெளியேற வேண்டும். அப்படி வெளியேறினால், அவர்களுக்கோ நமக்கோ எந்தச் சிரமமும் ஏற்படாது. எந்தச் சூழ்நிலையிலும் அரசு நில ஆக்கிரமிப்பு அனுமதிக்கப்படாது' என்று திட்டவட்டமாகக் கூறினார்.
முன்னதாக, மே 12 அன்று தில்ஜலா-டாப்ஸியா பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, சட்டவிரோத ஆக்கிரமிப்பு என கூறி தோல் தொழிற்சாலை இயங்கி வந்த கட்டிடம் கொல்கத்தா மாநகராட்சியால் இடிக்கப்பட்டது. அருகில் இருந்த வீடுகளையும் இடிக்க அதிகாரிகள் முயன்றபோது, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக கல்கத்தா உயர்நீதிமன்றம், அப்பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களை இடிப்பதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. தில்ஜலா-டாப்ஸியா பகுதி இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.