ஹைதராபாத்தை சேர்ந்த சிறுநீரகவியல் மருத்துவர் சையது முகமது கவுஸ், சீனாவின் வூஹான் நகரில் உள்ள டோங்ஜி மருத்துவமனையில் ரோபோ அறுவை சிகிச்சையில் சிறப்பு பயிற்சி பெற்றார். இந்நிலையில், வூஹானில் இருந்து சுமார் 3,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு நோயாளிக்கு அவர் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்துள்ளார். இந்த அதிநவீன அறுவை சிகிச்சை சுமார் 90 நிமிடங்கள் நீடித்தது.
ஹைதராபாத் மருத்துவமனையில் நோயாளிக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, சிறப்பு ரோபோ கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. அதேசமயம், வூஹான் மருத்துவமனையில் இருந்த மருத்துவர் சையது முகமது கவுஸ், ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஹைதராபாத்தில் உள்ள ரோபோ கருவிகளை இயக்கி இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். இது இந்திய மருத்துவத் துறையில் ஒரு புதிய மைல்கல்லாக கருதப்படுகிறது.
இந்த தொலைதூர அறுவை சிகிச்சையானது 5ஜி தொழில்நுட்பம், 3டி கேமராக்கள் மற்றும் செயற்கைக்கோள் இணைப்பு ஆகியவற்றின் உதவியுடன் சாத்தியமானது. இதன் மூலம், மருத்துவர் சையது முகமது கவுஸ் சீனாவில் இருந்தபடியே ஹைதராபாத்தில் உள்ள ரோபோ கருவிகளை துல்லியமாக இயக்க முடிந்தது. இந்த முயற்சி இந்திய மருத்துவத் துறையில் ஒரு புதிய சகாப்தத்தை துவக்கி வைத்துள்ளதாக மருத்துவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இது போன்ற தொலைதூர அறுவை சிகிச்சைகள் எதிர்காலத்தில் பல நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தொலைதூர மற்றும் அணுக முடியாத பகுதிகளில் உள்ளவர்களுக்கு உயர்தர மருத்துவ சேவையை வழங்குவதில் இது முக்கிய பங்கு வகிக்கும். இந்திய மருத்துவத் துறையின் வளர்ச்சிக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.