'விலங்கு' வெப் தொடர் மற்றும் சூரி நடித்த 'மாமன்' போன்ற படங்களை இயக்கிய பிரசாந்த் பாண்டிராஜ், தற்போது 'வாரண்ட்' என்ற வெப் தொடரில் கதாநாயகனாக நடித்துள்ளார். கிராமப்புறப் பின்னணியில் உருவாகியுள்ள இத்தொடர், காவல்துறையின் மற்றொரு பக்கத்தையும், அதிகாரத்தின் இருண்ட முகத்தையும் மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
இத்தொடரில் பாலாஜி சக்திவேல், காளி வெங்கட், அருள்தாஸ், நம்ரிதா, அருள் ஜோதி, சாயாதேவி, ஹலோ கந்தசாமி, மீனா, கவுசல்யா, மற்றும் வையாபுரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். பின்னணி இசையமைக்க, அசோக் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஜீ 5 வழங்கும் இந்த வெப் சீரிஸை விக்னேஷ் நடராஜன் இயக்கியுள்ளார். சிவன் பிக்சர்ஸ் மற்றும் எஸ் ஸ்டூடியோஸ் சார்பில் பிரசாந்த் பாண்டிராஜ், பி. விஷால், பி.எம். ஆதீஸ்வரர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் பாண்டிராஜ், சுசீந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய பிரசாந்த் பாண்டிராஜ், “‘புரூஸ்லி’ படத்திற்குப் பிறகு நான் படம் இயக்காத காலகட்டத்தில் ‘விலங்கு’ வெப் தொடரை இயக்கினேன். அதற்கு கிடைத்த வரவேற்புதான் எங்களுக்குப் பெரிய அடையாளத்தைத் தந்தது. ‘விலங்கு’ தொடரைப் போலவே மற்றொரு வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. இதில் நான் நடிகராக மாறியுள்ளேன்” என்று தெரிவித்தார். இந்த வெப் சீரிஸ் மே 22ஆம் தேதி முதல் ஜீ 5 தளத்தில் வெளியாகிறது.
