நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த படங்கள் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சேயோன்’ படத்தில் தற்போது சிவகார்த்திகேயன் முழுவீச்சில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் பெருமையுடன் தயாரித்து வருகிறது.
‘சேயோன்’ படத்தைத் தொடர்ந்து, சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முதலில் இந்தப் படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கவிருந்தார். ஆனால், பட்ஜெட் தொடர்பான பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, வெங்கட்பிரபு இந்தப் படத்திலிருந்து விலகிக்கொண்டார். இதனால், சத்யஜோதி நிறுவனம் மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளது.
தற்போது, ‘பார்க்கிங்’ படத்தின் இயக்குநர் ராம்குமார், சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்காக சிவகார்த்திகேயனை வைத்து இயக்கவுள்ளார். இதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், நடிகர் சிவகார்த்திகேயன் இதில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், இயக்குநர் சிபி சக்கரவர்த்தி, நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து இயக்கவிருந்த படத்தில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக, ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளது. இந்தப் படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்க ஒப்புதல் அளித்துள்ளார். ரஜினியின் படத்தை இயக்குவதற்கு முன்பாகவே, சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க சிபி சக்கரவர்த்தி திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.