வேலூர்: இந்திய வனப்பணித் தேர்வில் (IFoS) 110-வது இடத்தைப் பிடித்து, வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் சவுரப் குமார் பால் சாதனை படைத்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜைச் சேர்ந்த இவர், 2022-ல் விஐடியில் கணினி அறிவியல் பிரிவில் பி.டெக் பட்டம் பெற்றவர்.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்திய இந்திய வனப்பணித் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. இதில், சவுரப் குமார் பால் 110-வது இடத்தைப் பெற்றுள்ளார். தொழில்நுட்பக் கல்வியில் சிறந்து விளங்கிய இவர், வனப்பணித் தேர்வில் வெற்றி பெற்றது பலருக்கும் உத்வேகம் அளித்துள்ளது.
விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன், துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன் ஆகியோர் சவுரப் குமார் பாலைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். விஐடி-யின் முன்னாள் மாணவர்கள் தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளில் தொடர்ந்து சிறந்து விளங்குவது பெருமை அளிப்பதாக வேந்தர் ஜி.விசுவநாதன் குறிப்பிட்டார்.
'தொழில்நுட்பப் பின்னணியில் இருந்து வந்து, நிர்வாகப் பணியில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்கு சவுரப் குமார் பாலின் வெற்றி ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமையும். இது போன்ற சாதனைகள் பல்கலைக்கழகத்திற்கும், மாணவர்களுக்கும் பெரும் பெருமையைத் தேடித்தருகிறது' என்று அவர் மேலும் தெரிவித்தார்.
