இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான ஒருநாள் அணியில் தனது இடத்தை உறுதி செய்வதற்காக, வரும் ஜூன் 22 அன்று பெங்களூருவில் உள்ள சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் (CoE) மையத்தில் முக்கிய உடற்தகுதி தேர்வில் பங்கேற்க உள்ளார். ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியின் போது ஏற்பட்ட காயத்தால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உள்நாட்டு ஒருநாள் தொடரில் இருந்து அவர் விலகியிருந்தார்.
விராட் கோலி, CoE உடற்பயிற்சி நிபுணர்களின் அறிவுறுத்தலின்படி இங்கிலாந்தில் தங்கி காயத்திலிருந்து மீண்டு வருகிறார். சமீபத்தில் லண்டனில், இங்கிலாந்து மற்றும் ஆர்சிபி (RCB) விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோர்டான் காக்ஸ் உடன் அவர் காணப்பட்டார். பெங்களூருவில் விராட் கோலியின் உடற்தகுதி தேர்வு முடிந்த பின்னரே தேர்வுக்குழுவினர் அணியை அறிவிப்பார்கள் எனத் தெரிகிறது.
CoE தரப்பில் லண்டனில் இருந்த விராட் கோலியைத் தொடர்பு கொண்டு, உடல்தகுதியை மீட்க சில வழிமுறைகள் வழங்கப்பட்டன. அவர் காயத்திலிருந்து வேகமாக குணமடைந்து வருவதாகவும், ஜூன் 22 அன்று CoE மையத்திற்கு வந்து மீண்டும் உடற்தகுதி தேர்வு நடத்தப்படும் என்றும், அதன் பின்னரே ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விராட் கோலிக்கு பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் நியூசிலாந்துக்கு எதிரான உள்நாட்டு தொடரில் சிறப்பாக ஆடிய கோலி, ஐபிஎல் தொடரிலும் ரன் குவித்து ஆர்சிபி அணியை இரண்டாவது முறையாக கோப்பை வெல்ல வழிநடத்தினார். இது அவருக்கு மிகச் சிறந்த ஆண்டின் முதல் பாதியாக அமைந்தது.
முன்னணி ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் காயம் குறித்த குழப்பங்கள் நீடிக்கும் நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகிய அவர், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் தவறவிட உள்ளார். ஐபிஎல் 2026 தொடரின் பாதியில் முதுகுவலியால் பாதிக்கப்பட்ட அவர், உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், அடுத்த நாளே ஏற்பட்ட புதிய காயத்தால் உள்நாட்டு தொடரில் இருந்து விலகினார்.
அயர்லாந்து, இங்கிலாந்து மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஆகிய டி20 தொடர்களுக்கான அணியில் தேர்வு செய்யப்படாத ஹர்திக் பாண்டியா, ஒருநாள் போட்டிகளுக்காக மட்டுமே தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தார். இருப்பினும், ஒருநாள் போட்டிகளுக்குத் தேவையான முழுமையான பந்துவீச்சு அளவை எட்டாததால் அவர் மீண்டும் அணியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். ஒருநாள் போட்டி வடிவத்திற்குத் தேவையான பந்துவீச்சு பயிற்சி மற்றும் உடற்தகுதியை அவர் இன்னும் முழுமையாகப் பெறவில்லை என்றும், அதற்கு கூடுதல் நேரம் தேவைப்படும் என்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூலை 14 அன்று பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் தொடங்க உள்ளது.