2027 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் பரிமாற்றங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி ஹர்திக் பாண்டயாவை வாங்கக் கூடாது என முன்னாள் இந்திய வீரர் சடகோபன் ரமேஷ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்டியா, அந்த அணியில் இருந்து விலக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், அவரை சிஎஸ்கே அணி வாங்க ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படும் செய்திகளுக்கு மத்தியில், சடகோபன் ரமேஷ் தனது யூடியூப் பக்கத்தில் இது குறித்து விரிவாகப் பேசியுள்ளார்.
சிஎஸ்கே அணிக்கு மிடில் ஆர்டரில் ஒரு சிறந்த ஆல்-ரவுண்டர் தேவை என்பது மறுக்க முடியாத உண்மைதான். ஆனால், அதற்காக சிவம் துபே, ஆயுஷ் மத்ரே, டெவால்ட் பிரெவிஸ் போன்ற இளம் வீரர்களை மும்பை இந்தியன்ஸ் அணிக்குக் கொடுத்துவிட்டு ஹர்திக் பாண்டியாவை வாங்குவது சரியான முடிவு அல்ல. எந்தச் சூழ்நிலையிலும் சிஎஸ்கே தனது இளம் வீரர்களை இழக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ஹர்திக் பாண்டியாவை ஒரு வீரராக வேண்டுமானால் சிஎஸ்கே அணி பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், எக்காரணத்தைக் கொண்டும் அவரை கேப்டனாக நியமிக்கக் கூடாது என்றும் சடகோபன் ரமேஷ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், 'ஹர்திக்கை நான் ஒரு சிறந்த வீரராகப் பார்க்கிறேன், ஆனால் அவர் ஒரு மோசமான கேப்டன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கோப்பையைப் பெற்றுத் தந்தாலும், அவர் விலகிய பிறகும் அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆனால், அவர் கேப்டனாகப் பொறுப்பேற்ற மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த சீசன்களில் புள்ளிப்பட்டியலில் 9 மற்றும் 10-வது இடங்களுக்குச் சரிந்தது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா தனது திறமையைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றும் சடகோபன் ரமேஷ் குற்றம் சாட்டினார். கடந்த சீசனில் அவர் 10 போட்டிகளில் வெறும் 22 ஓவர்கள் மட்டுமே வீசியுள்ளார். முக்கியமான ஓவர்களை அவர் வீசவில்லை, மேலும் பேட்டிங்கிலும் மிகவும் பின் வரிசையில் களம் இறக்கப்பட்டார்.
குஜராத் அணியில் இருந்தபோது, ஆஷிஷ் நெஹ்ரா அளித்த அழுத்தம் மற்றும் வழிகாட்டுதலே அவரை சிறப்பாகச் செயல்பட வைத்தது. ஹர்திக்கிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வர ஒரு சிறந்த கேப்டனும், தகுதியான பயிற்சியாளரும் அவசியம் தேவை என்று சடகோபன் ரமேஷ் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
