புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.விஜயபாஸ்கரின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கில் பதிலளிக்குமாறு சி.விஜயபாஸ்கர் மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் விராலிமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட சி.விஜயபாஸ்கர், 1,05,773 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளர் முருகேசனை விட 62,073 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றிருந்தார்.
இந்நிலையில், சி.விஜயபாஸ்கரின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்ற கே.கே.செல்லப்பாண்டியன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவில், சி.விஜயபாஸ்கர் தேர்தல் பிரச்சாரத்தின்போது, வாக்காளர்களைக் கவர்வதற்காக ரூ.10,000 மற்றும் ரூ.2,000 மதிப்புள்ள கூப்பன்களை விநியோகித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வாக்காளர்கள் பிரிட்ஜ் வாங்குவதற்காக இந்த கூப்பன்கள் வழங்கப்பட்டதாகவும், இது தேர்தல் முறைகேடு என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, சி.விஜயபாஸ்கரின் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி என்.செந்தில்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் பிரச்சாரத்தின்போது கூப்பன்கள் விநியோகித்து முறைகேட்டில் ஈடுபட்டதை மனுதாரர் தரப்பு சுட்டிக்காட்டியது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கு குறித்து சி.விஜயபாஸ்கர் மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கின் விசாரணையை வரும் மூன்று வாரங்களுக்குத் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
குறிப்பிடத்தக்க வகையில், சி.விஜயபாஸ்கர் தற்போது தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார்.

