முதலமைச்சர் விஜய், ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசியது ஆணவத்தின் உச்சம் என்றும், அதிகாரத் திமிரின் வெளிப்பாடு என்றும் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கடுமையாக விமர்சித்துள்ளார். எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மின்வெட்டு, விவசாயிகள் பிரச்சினை, சீரழிந்துவரும் சட்டம் ஒழுங்கு போன்ற நியாயமான கேள்விகளை எழுப்பியதாகவும், பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட தவெகவினரை ஆதாரங்களுடன் குற்றம்சாட்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிப்பார் என எதிர்பார்த்த நிலையில், அவர் ஸ்டாண்ட்-அப் காமெடி போல உளறிக் கொட்டியதாகவும், பதிலுரை முழுக்க ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் பிதற்றல்களுமே நிறைந்திருந்ததாகவும் கீதா ஜீவன் கூறியுள்ளார். ஒரே மாதத்தில் 150 பாலியல் குற்றங்கள், கொலை, கொள்ளை என சட்டம் ஒழுங்கு சீரழிவு, மின்சாரத்துறை செயலழிப்பு, விவசாயிகள் போராட்டம் போன்றவற்றுக்குப் பதில் சொல்ல வக்கற்ற முதல்வர், திமுக மீது அவதூறை அள்ளித் தெளித்திருப்பதாக அவர் சாடியுள்ளார்.
பாஜகவுடன் இணக்கமாக இருப்பதாகக் கூறிவிட்டு திமுகவைக் குறிவைத்து தாக்குவது முதல்வர் விஜயின் உண்மையான முகத்தை அம்பலப்படுத்திவிட்டதாக கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். திமுக, முதல்வர் விஜயின் வெற்றுக் கூச்சல்களுக்கு அஞ்சும் இயக்கம் அல்ல என்றும், அவருடைய வசனங்களை சினிமா ஷூட்டிங்குடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்வில் இருக்கும் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கை முறையையும், அனைத்துப் பகுதிகளையும் அறிந்தவர் என்றும், கலைஞரின் வழியில் தமிழ்நாட்டை வளர்ச்சி அடையச் செய்தவர் என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
முதலமைச்சர் விஜய், சட்டமன்றத்துக்கென்று உள்ள மாண்பை மறந்து, அதை ஒரு பொழுதுபோக்கு மன்றமாக மாற்றியிருப்பதாகவும், அமைச்சர்கள் டூயட் பாடல்களுக்கு ஆடுவதாகவும், எம்எல்ஏக்கள் விசில் அடிப்பதாகவும் கீதா ஜீவன் விமர்சித்துள்ளார். இந்த ஆட்சியில் இன்னும் என்னென்ன கொடுமைகளையெல்லாம் பார்க்கப் போகிறோமோ என வேதனையடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.