சென்னை மெட்ரோ ரயிலை ஆய்வு செய்வதை விட, காவிரி ஆற்றின் நிலைமையை முதல்வர் விஜய் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். மக்களின் பிரச்சனைகளில் முதலமைச்சர் விஜய் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயற்சிப்பதை கண்டித்து, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், "கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தமிழ்நாட்டிற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். முதலமைச்சர் விஜய் தற்போது சென்னையில் மெட்ரோ ரயில் போன்ற திட்டங்களை ஆய்வு செய்து வருகிறார். ஆனால், அவர் முதலில் காவிரி ஆற்றின் நிலைமையை ஆய்வு செய்ய வேண்டும். ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைகளுக்கு நேரில் சென்று முதலமைச்சர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
மின்மிகை மாநிலமாக திகழ்ந்த தமிழ்நாட்டில் தற்போது மின்வெட்டு பிரச்சனை அதிகரித்துள்ளது. இது குறித்து முதலமைச்சர் விஜய் உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் அடிப்படை பிரச்சனைகளில் அவர் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்" என்று அவர் கூறினார்.
மேலும், தமிழ்நாட்டின் நலன்களைப் பாதுகாக்க காவிரி நீர் பங்கீட்டில் மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கர்நாடகாவின் அணைக்கட்டு முயற்சியால் தமிழ்நாட்டின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தேமுதிகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டு கர்நாடக அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தமிழ்நாட்டின் நீர் ஆதாரங்களை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்த கட்ட போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
