தமிழக முதல்வர் விஜயை கரூர் செல்ல விடாமல் திமுக சதி செய்வதாக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முதல்வர் விஜய் கரூருக்குச் செல்வதைத் தடுக்க தி.மு.க தொடர்ந்து முட்டுக்கட்டை போடும் வேலைகளைச் செய்து வருகிறது. இதையெல்லாம் தாண்டி அவர் அங்கு செல்வார். ஒரு மாநிலத்தின் முதல்வராக இருக்கும்போதே அவருக்கு இந்த நிலைமை என்றால், சாதாரண குடிமகனாக இருந்தபோது என்னவெல்லாம் செய்திருப்பார்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், முதல்வர் விஜய் கரூர் செல்வதை அறிந்ததும், நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து அதைத் தடுக்க தி.மு.க முயற்சிப்பதாகவும் அவர் கூறினார். இது குறித்து பேசிய அமைச்சர், "செந்தில்பாலாஜி ஏன் ஓடி ஒளிகிறார்? சம்மன் அனுப்பினால் விசாரணைக்கு ஆஜராவதில் என்ன சிக்கல்? 100 சதவீதம் தவறு இருப்பதால் தான் செந்தில்பாலாஜி ஆஜராகவில்லை" எனத் தெரிவித்தார்.
கரூரில் அசம்பாவிதம் நடந்தபோது, முதல்வரின் இல்லம் மற்றும் அலுவலகம் போன்றவற்றை தி.மு.க-வினர் உளவு பார்ப்பது போல் கண்காணித்ததாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நிதியுதவி கூட கொடுக்க விடாமல் ஆளுங்கட்சியினர் திட்டமிட்டுத் தடுத்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மாவட்ட வழக்கறிஞர் நியமனத்தில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும், அரசு வழக்கறிஞர் நியமனம் 100% நேர்மையாகவும், நியாயமாகவும் மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் நிர்மல் குமார் விளக்கினார். பணம் பெற்றுக்கொண்டு நியமனம் என்ற குற்றச்சாட்டு தவறானது என்றும், நியமனங்கள் தொடர்பாக புகார் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
