கரூர் சம்பவத்திற்கு முதலமைச்சர் ஜோசப் விஜய்யும் ஒரு காரணம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
திண்டிவனத்தில் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாகக் குற்றம் சாட்டினார்.
இந்தச் சூழ்நிலையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றும், தமிழகத்தில் குற்றங்களைத் தடுப்பதில் கவனம் செலுத்தாமல் ஆளுநரை வைத்து அரசியல் செய்வதாகவும் நயினார் நாகேந்திரன் விமர்சித்தார். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ள நிலையில், அதை கவனிக்காமல் முதல்வர் விஜய் குதிரை பேரம் செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார். தவறு செய்பவர்கள் மீது எவ்வித சமரசமும் இன்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், கரூர் சம்பவத்திற்கு முதலமைச்சர் விஜய்யும் ஒரு காரணம் என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார். கரூர் மக்களுக்கு பகல் 12 மணிக்கு வருவதாகக் கூறிய விஜய், இரவு 7 மணிக்கு வந்ததால் நெரிசல் ஏற்பட்டதாக அவர் கூறினார். கரூர் மக்களை 7 மணி நேரம் காத்திருக்க வைத்த விஜய், அவர்களுக்கு தண்ணீர் கூட வழங்கவில்லை என்றும், இத்தனை உயிரிழப்புகள் நடந்த பிறகும் மக்களைச் சந்திக்காமல் சென்னை சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.
மக்கள் நலன் சார்ந்த பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட வேண்டும் என்றும், பழைய காலத்திலிருந்தே ஆளுநரை வைத்து அரசியல் செய்வதாகவும் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார். மக்களுக்கு நல்லது செய்வதே அரசியல் கட்சிகளின் கடமை என்றும் அவர் வலியுறுத்தினார்.
