தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்று 41 நாட்கள் ஆன நிலையில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் கூறி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட திமுக ஆதரவாளரும், பிக்பாஸ் பிரபலமுமான ஜூலி (ஜூலியானா மேரி), தவெக அரசின் 41 நாள் ஆட்சியை உத்திரப்பிரதேச மாநிலத்துடன் ஒப்பிட்டு கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
மழை, வெயில் பாராமல் கொள்கைக்காகவும் மக்களுக்காகவும் போராட்டத்தில் திரண்டதாகக் குறிப்பிட்ட ஜூலி, மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் குற்றம் சாட்டினார். ஒரே நாளில் 12 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளதாகவும், 3 வயதுக் குழந்தைகளைக் கூட இந்த ஆட்சியில் பாதுகாக்க முடியவில்லை என்றும் அவர் ஆதங்கப்பட்டார். கடந்த ஆட்சியில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் ட்விட்டரில் குரல் கொடுத்த தற்போதைய கூட்டணிக் கட்சிகள் இப்போது எங்கே போனார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய ஜூலி, தவெக தலைவர் விஜய்யை நோக்கி நேரடி கோரிக்கை விடுத்தார். சமூக வலைத்தளங்களில் பெண்களை விமர்சிப்பவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் ஆபாச வார்த்தைகள் குறித்து முதலமைச்சர் விஜய் ஒரு வார்த்தை பேசி தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். “விஜய் அண்ணா, பெண்களுக்கு எதிராக இப்படி ஆபாச சொற்களைப் பேச வேண்டாம் என்று உங்கள் ஆதரவாளர்களிடம் ஒரே ஒரு வார்த்தை சொல்லுங்கள். எங்களுக்கு காசு, பணம், தங்கம் எதுவும் வேண்டாம்; தமிழ்நாட்டில் பெண்கள் நிம்மதியாக நடமாட உயிர் பாதுகாப்பு மட்டுமே வேண்டும்” என்று உச்சகட்ட ஆத்திரத்துடனும் கண்ணீருடனும் பேசினார்.
மேலும், தவெக அரசு தனது 40 நாள் ஆட்சியில் லஞ்சம், ஊழல் ஒழிக்கப்பட்டுவிட்டதாகக் கூறுவதை ஜூலி கடுமையாக மறுத்தார். திருச்சியில் உள்ள மருத்துவமனை டெண்டர் ஒன்று வெறும் 6 மணி நேரத்திற்குள் முடிக்கப்பட்டதில் எப்படி ஊழல் இல்லாமல் இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய அவர், 48 மணி நேரத்திற்குள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அப்ரூவல் வழங்கப்படுவதைச் சுட்டிக்காட்டி, இது தமிழ்நாடா அல்லது உத்தரப்பிரதேசமா என்று காரசாரமாகத் தன் உரையை முடித்தார்.