வெற்றிக் கழகமா? வெற்று வாக்குறுதிக் கழகமா? – நயினார் நாகேந்திரன் கேள்வி

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நடிகர் விஜய் தலைமையிலான அரசை 'வெற்றிக் கழகமா அல்லது வெற்று வாக்குறுதிக் கழகமா?' என கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது:

'திரு. விஜய் அவர்களே, உங்கள் அரசு வெற்றிக் கழகமா அல்லது வெற்று வாக்குறுதிக் கழகமா? தேர்தல் பிரச்சாரத்தின் போது 24 மணி நேரமும் தங்குதடையற்ற மின்சாரம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தீர்கள். ஆனால், ஆட்சிக்கு வந்ததும் கணக்கிலடங்காத மின்வெட்டால் தமிழக மக்களை அவதிக்குள்ளாக்குகிறீர்கள்!'

'மேலும், முதலில் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று கூறிவிட்டு, பின்னர் 500 யூனிட்டுக்குள் பயன்படுத்தினால் மட்டுமே இலவசம் என நிபந்தனை விதித்தீர்கள். மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்துவோம் என்றீர்கள், ஆனால் இரண்டு மாதங்கள் ஆகியும் அதற்கான அறிவிப்பு கூட வெளியாகவில்லை!'

'மின்சாரத்துறை மின்வெட்டுத் துறையாக மாறிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், அதைக் கண்டுகொள்ளாமல் உங்கள் அமைச்சர் திரு. நிர்மல்குமார் அவர்கள் ரீல்ஸ்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும், திருப்பரங்குன்றம் தீபத்தூணை இருளில் மூழ்கடிப்பது குறித்தும் பேட்டி அளித்துக்கொண்டிருக்கிறார்.'

'மொத்தத்தில், இது குதிரை வேக அரசாங்கம் அல்ல, போதாட்ட அரசாங்கம் என்பது தெளிவாகிறது. மக்களுக்கு இப்படி ஏமாற்றம் அளிப்பதை நிறுத்திவிட்டு, கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுங்கள் முதல்வரே!' என நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

மக்கள் பணத்தை வீணடிக்கும் விஜய் அரசு: நயினார் நாகேந்திரன் கண்டனம்

விளம்பர மோகத்தால் மக்கள் பணத்தை வீணடிக்கும் திரு. ஜோசப் விஜய் அரசு! முதல்வர் திரு. விஜய் பிறந்தநாளன்று 300 அரசுப் பேருந்துகளின் துவக்க விழாவை திட்டமிட்டிருந்த தவெக அரசு, பிறந்தநாள் முடிந்து இரண்டு நாட்களாகியும் துவக்க விழாவை நடத்தாததால், புதிய பேருந்துகள் சென்னையிலேயே நிற்பதாக வெளியாகிய செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

300 பேருந்துகளையும் ட்ரோன் ஷாட் எடுக்கும் மோகத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பேருந்துக்கு ₹40,000 வீதம் செலவழித்து தலைநகருக்கு கொண்டு வரப்பட்டதன் மூலம், ரீல்ஸ் மாடல் அரசின் பேராசையால் மக்கள் பணம் ₹1 கோடி இன்று வீணாகியிருக்கிறது. உலக நாடுகள் எரிபொருள் தட்டுப்பாட்டில் தவிக்கும் இந்த வேளையில், இப்படி ஒரு விளம்பர ஷூட்டிங் தேவையா? அதிலும், கடனில் தமிழகம் மிதக்கும் நிலையில், இப்படி வரிப்பணத்தை வீணாக்கலாமா?

'மக்கள் பணத்தை தொட மாட்டோம்! தொடவிடவும் மாட்டோம்' என்று கூறிய முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், பஞ்ச் வசனங்களை பேசுவதை விடுத்து, செயலில் காட்ட வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

உடனடியாக புதிய பேருந்துகளை அந்தந்த பணி முனையங்களுக்கு அனுப்பி இயக்க உத்தரவிடுவதோடு, இது போன்ற வீண் விளம்பர செலவினங்கள் இனியும் நேராதிருக்க உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version