தமிழக சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்ற தவெக கட்சி, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, ஐயுஎம்எல் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றியது. முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் 35 பேர் இடம்பெற்றுள்ளனர். முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, விஜய் முதன்முறையாக டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
சென்னையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இன்று காலை 10 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்ட முதல்-அமைச்சர் விஜய், அங்குள்ள தமிழ்நாடு அரசு இல்லத்திற்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இன்று மாலை 4.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை முதல்-அமைச்சர் விஜய் சந்திக்க உள்ளார். முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, பிரதமரை அவர் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்த சந்திப்பின் போது, பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான ஒப்புதல்கள், மேகதாது அணை விவகாரம், மற்றும் 'பி.எம்.ஸ்ரீ' திட்டம் போன்ற முக்கிய விஷயங்கள் குறித்து விரிவான மனுவை முதல்-அமைச்சர் விஜய் பிரதமர் மோடியிடம் சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த சந்திப்பிற்குப் பிறகு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் விஜய் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்-அமைச்சர் விஜய் இன்று இரவு டெல்லியில் தங்கிவிட்டு, நாளை (வியாழக்கிழமை) அகில இந்திய காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்திக்க உள்ளார். அதன் பின்னர், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களையும் சந்திக்கும் திட்டங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அனைத்து சந்திப்புகளையும் முடித்த பிறகு, நாளை அன்றே முதல்-அமைச்சர் விஜய் சென்னை திரும்ப உள்ளார்.